நில மோசடி.. கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி மீது லோக்ஆயுக்தா எப்.ஐ.ஆர்!
பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் குமாரசாமி ஆகியோர் மீது கர்நாடக லோக்ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
பாஜக மற்றும் மஜத கூட்டணி ஆட்சியின்போது முதல்வராக பதவி வகித்தவர் குமாரசாமி. பெங்களூரு அடுத்த கங்கேனஹ்ளி என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் மற்றும் 11 குண்டா (கர்நாடக நிலமதிப்பு) அளவுள்ள நிலத்தை டிநோடிபை செய்ய முயன்றார்.
அதற்குள் அந்த ஆட்சி கலைந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில், அந்த நிலம் டிநோடிபை செய்யப்பட்டது. 2010ல் இந்த சம்பவம் நடந்தது.
இந்த நிலம், குமாரசாமியின் மாமியார் விமலாவுக்கு சொந்தமானது. இதை 1976ம் ஆண்டில், பெங்களூர் வளர்ச்சி குழுமம், நோடிபை செய்திருந்தது. அந்த இடத்தில் மதடஹள்ளி லேஅவுட் என்ற பெயரில் குடியிருப்புகள் அமைக்க பெங்களூரு வளர்ச்சி குழுமம் நோடிபை செய்து அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலத்தை விடுவித்ததன் மூலம், தற்போதுள்ள நில மதிப்பில் விமலாவால் அதை விற்பனை செய்ய முடியும். இது ஊழலுக்கு நிகரானது. வேண்டியவர்களுக்காக அரசு நிர்வாகத்தை வளைப்பது குற்றம். எனவே லோக்ஆயுக்தாவில் சிலர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், இவ்விரு முன்னாள் முதல்வர்கள் மீதும் லோக்ஆயுக்தா முதல் தகவல் அறிக்கையை தற்போது பதிவு செய்துள்ளது.
ஒப்பந்தப்படி 20 மாதங்கள் முடிந்ததும், ஆட்சியை விட்டுத்தரவில்லை என்று குற்றம்சாட்டிதான், பாஜக தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கி கூட்டணி ஆட்சியை கலைத்திருந்தது. குமாரசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்துதான், எடியூரப்பா ஆட்சியை பிடித்தார். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அதே குமாரசாமிக்கு ஆதரவாக நிலத்தை விடுவிடித்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிநோடிபை என்றால் என்ன?
குடியிருப்புகள் அமைக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, சாலை, மேம்பாலம் அமைக்கவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காகவோ, தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கம். இதற்காக அரசு ஒரு விலையை நிர்ணயம் செய்து நிலத்தை கொள்முதல் செய்யும். அரசின் வழிகாட்டு மதிப்பின்படி நிலத்துக்கு விலை அளிக்கப்படும். ஆனால், இது சந்தை மதிப்பைவிட குறைவானதாகவே இருக்கும்.
எனவே, முதல்வருக்கு வேண்டப்பட்டவர்கள், யாருடைய நிலமாவது அரசால் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அதை விடுவிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில், அரசு தனது நோடிபிகேஷன் பட்டியலில் இருந்து அந்த நிலத்தை விடுவித்தால், கூடுதல் விலைக்கு நிலத்தை விற்பனை செய்ய நில உரிமையாளருக்கு வாய்ப்பு கிடைக்கும். அல்லது, மேலும் பல ஆண்டுகள் கழித்து இன்னும் அதிக விலைக்கு நிலத்தை விற்பனை செய்ய முடியும். இதுபோல டிநோடிபை செய்ய முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது.