டிஜிட்டல் உலகில் இனி கோலோச்சப் போவது ஆங்கிலம், சைனீஸ், இந்திதான்.... பிரதமர் மோடி
போபால்: டிஜிட்டல் உலகில் இனி செல்வாக்காக கோலோச்ச இருக்கப் போவது ஆங்கிலம், சைனீஸ் ஆகியவற்றுடன் இந்தி மொழிதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
போபாலில் இன்று உலக இந்தி மொழி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
எனக்கு தாய்மொழி குஜராத்திதான்... நான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டீ வியாபாரியிடம் இருந்து இந்தி மொழியைக் கற்றுக் கொண்டேன்.
நாம் இந்தியை மறந்தால் அது நாட்டுக்குத்தான் பேரிழப்பு. இஸ்ரேல் பிரதமருக்கு ஹீப்ரு மொழியில் நான் வாழ்த்து தெரிவித்தால் அவர் இந்தி மொழியில்தான் பதிலளிக்கிறார்.
ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் இந்தி திரைப்படத் துறை மகத்தான பணியை செய்து வருகிறது. இனி டிஜிட்டல் உலகத்தில் ஆங்கிலம், சைனீஸ் மற்றும் இந்தி மொழிகள்தான் கோலோச்ச இருக்கின்றன.
இந்தி மொழியை மட்டுமல்ல இதர மொழிகளுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு மொழி உயிரோடு இல்லாது போனால் அதன் இலக்கியம் எவ்வாறு உயிர்ப்போடு வாழ முடியும்?
இந்திய மாநிலங்களை ஒன்றிணைத்து பலமாக்க இந்தி மொழிதான் பயன்படுகிறது. வங்கம் மற்றும் தமிழ் மொழியில் உள்ளவற்றை இந்தியில் சேர்ப்பதற்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.