சிக்மகளூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்
பெங்களூர்: சிக்மகளூரில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் உள்ள டவுன் மஹிலா சமாஜா பள்ளி வளாகத்திற்குள் வியாழக்கிழமை மதியம் 12.20 மணிக்கு 8 வயது சிறுத்தை ஒன்று புகுந்தது. பள்ளியில் இருக்கும் ஜெராக்ஸ் அறைக்குள் சிறுத்தை சென்று பதுங்கியது.
காடூர் கிளப் அருகே சிறுத்தையை முதலில் பார்த்தது பட்டாபி கவுடா என்பவர். சிறுத்தை ஒரு பெண்ணை தாக்க முயன்றது. அப்போது பட்டாபி ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றினார். அந்த பெண்ணை காப்பாற்றுகையில் சிறுத்தை தாக்கியதில் பட்டாபியின் வயிறு மற்றும் தோளில் காயம் ஏற்பட்டது.
பள்ளிக்குள் சிறுத்தை பதுங்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் அந்த பள்ளிக்கு வந்தனர். சிறுத்தை பதுங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவை வனத்துறை அதிகாரி கணேஷ் மூடினார். ஜன்னலை மூடுகையில் சிறுத்தை தாக்கி அவரது கையில் காயம் ஏற்பட்டது. முதலில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறுத்தை பதுங்கியிருக்கும் செய்தி அறிந்து பள்ளி வளாகத்தில் கூட்டம் கூடிவிட்டது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சிமோகாவில் இருந்து வந்த கால்நடை மருத்துவர் சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டார்.
சிறுத்தை பதுங்கியிருந்தபோது பள்ளி மைதானத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். நல்லவேளையாக அவர்கள் சிறுத்தையிடம் இருந்து தப்பித்தனர்.