அத்தனை பேர் இருந்த பிரச்சார மேடையில்.. பெண் வேட்பாளரிடம் அத்துமீறிய ம.பி. பாஜக அமைச்சர்! அதிர்ச்சி
போபால்: தேர்தல் பிரச்சார மேடையில் முதல்வர் சிவராஜ் சவுகான் முன்னிலையில், பாஜக பெண் வேட்பாளரிடம் மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவற்றிலுள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள், மேலும் மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 16 சட்டமன்ற இடங்களுக்கான இடைத் தேர்தல்கள் அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டம் ராய்கான், தனித் தொகுதியும் ஒன்றாகும்.

பாஜக பெண் வேட்பாளர்
இங்கு பாஜக சார்பில் பிரதிமா பாக்ரி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் பாஜக தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை, ராய்கானில் பாஜக வேட்பாளர் பிரதிமாவுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

பிரச்சார மேடை
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் அமர்ந்திருக்க அவருக்கு அருகே பிரதிமா பாக்ரி அமர்ந்திருந்தார். அதற்கு அடுத்தாற்போல, கனிம வளத் துறை அமைச்சர் பிரிஜேந்திர பிரதாப் சிங் அமர்ந்திருந்தார்.

கை வைத்த அமைச்சர்
இந்த நிலையில், முதல்வரை பார்த்து திரும்பி பேசும் சாக்கில், பிரதிமா பாக்ரி தொடை மீது கை வைத்தார் பிரிஜேந்திர சிங் யாதவ். அப்படியே கை வைத்தபடி, சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினார். இதனால் பிரதிமா பாக்ரிக்கு சங்கோஜமாக இருந்தது. அது அவரது முகத்தில் தெரிந்தது. ஆனால் அவரால் உடனடியாக என்ன செய்வது என முடிவெடுக்க முடியவில்லை. எனவே கையை தட்டிவிட முற்படவில்லை. இத்தோடு முடியவில்லை, இந்த விவகாரம்.

கூந்தலில் கை விட்ட அமைச்சர்
சிறிது நேரம் கழித்து அதே கூட்டத்தில், முதல்வர் ஓட்டு கேட்டு நின்றபடி உரையாற்றினார். அப்போது அவரது அருகே பிரதிமா பாக்ரி கும்பிட்டபடி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பிரிஜேந்திர சிங் யாதவ், பிரதிபா பாக்ரி கூந்தலுக்குள் கை விட்டு ஏதோ செய்தார். இதனால் திடுக்கிட்ட பிரதிமா பாக்ரி திரும்பிப் பார்த்தபோது, அமைச்சர் தனது கண்ணாடிகளை நோக்கி கை காட்டினார். அதாவது அவரது கண்ணாடி கூந்தல் முடியில் சிக்கியதாகவும், முடியை விடுவிக்க முற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். இதுபோன்ற செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கண்டனம்
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வெட்கமில்லாத செயல். சத்னா பாஜக வேட்பாளரிடம் பாஜக அமைச்சர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பாஜக வேட்பாளர் சங்கடமாக இருப்பது அவரது முகத்திலேயே தெரிகிறது. சிவராஜ் சார், பாஜக தலைவர்களிடமிருந்து மகளைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது நடந்த அணை தொடர்பான நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் அமைச்சர் அம்பரீஷின் மனைவி சுமலதாவின் இடுப்பில் கை வைத்து அருகே இழுத்து நிறுத்தியதும், உடனடியாக சுமலதா அவரது கையை தட்டி விட்டதும் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications