தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கொன்டு வரப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட நாட்டில் உள்ள 100 இடங்களைத் தூய்மையான இடங்களின் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளளது. முதல் கட்டமாக 10 இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய அமைச்சரும், தூய்மை இந்தியா திட்டத்தின் பொறுப்பாளரான நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள 4,041 நகரங்களில் உள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தூய்மைப்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதில் பாஜகவினர், சங் பரி்வார் அமைப்பினர், பிற அமைப்பினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர். இருப்பினும் இந்தியாவில் இதுதொடர்பான விழிப்புணர்வு இன்னும் பெரிய அளவில் வரவில்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 10 இடங்களை சுத்தப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் டோமர் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள 100 இடங்களை தேர்வு செய்து சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இவை ஆன்மிக புனித தலம் அல்லது சுற்றுலாத் தலங்களாக இருக்கும்.
முதல் கட்டமாக 10 முக்கிய இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி தாஜ்மஹால் (உத்திரபிரதேசம்), மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், வைஷ்ணவதேவி கோவில் (ஜம்மு-காஷ்மீர்), சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (மகாராஷ்டிரா), அஜ்மீர் ஷெரீப் தர்கா (ராஜஸ்தான்), காமக்யா கோவில் (அஸ்ஸாம்), வாரணாசி மணிகர்னிகா படித்துறை (உத்திர பிரதேசம்), பூரி ஜெகன்நாதர் கோவில் (ஒடிசா), பொற்கோவில் (பஞ்சாப்) ஆகிய 10 இடங்களில் சிறப்பு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்றார் டோமர்.