மேகி நூடுல்ஸ் தரமானது... பாதுகாப்பானது... சொல்கிறது நெஸ்லே
டெல்லி : மேகி நூடுல்ஸ் தரமானது என்றும், ஆய்வு முடிவுகளின் படி பாதுகாப்பானது என்றும் நெஸ்லேவின் சர்வதேச சி இ ஓ பால் தெரிவித்துள்ளார்.
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு உப்பு மற்றும் ரசாயானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் நெஸ்லே நிறுவனத்தின் சர்வதேச சி இ ஓ பால். அப்போது அவர் கூறியதாவது:-
மேகி நூடுல்ஸ் தரமானது. உலகம் முழுவதும் ஒரே தரத்திலேயே மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது. ஆய்வு முடிவுகளின்படி மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளது.
நுகர்வோரின் நலன் மற்றும் தரத்திற்கு நெஸ்லே முக்கியத்துவம் தருகிறது. மேகி நூடுல்ஸில் எம் எஸ்.ஜி. இல்லை. அதோடு இனி எங்கள் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் எம்.எஸ்.ஜி. இல்லை என்ற வாக்கியத்தையும் நீக்குகிறோம்' என்றார்.
மேலும், ‘மக்கள் குழப்பான மனநிலையில் உள்ளதால் மேகி நூடுல்ஸைத் திரும்ப பெறுகிறோம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை காத்திருப்போம். நூறு வருடங்களாக இந்த சந்தையில் நாங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். காரியம் உள்ளதாக புகார் வந்த உடன் ஆயிரம் தொகுதிகளில் நாங்கள் சோதனை நடத்தினோம். அதில் ஒன்றில் கூட காரியம் காணப்படவில்லை.
எங்களது பங்குகளின் விலை குறைவதை பற்றி கவலைப்படவில்லை. மக்களின் நம்பிக்கை குறைவதை பற்றித்தான் கவலைப்படுகிறோம். எங்களின் அனைத்து தொழிற்சாலைகளையும் சோதனையிட அதிகாரிகள் முன்வந்தால் ஒத்துழைக்க தயாராக உள்ளோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேகி நூடுல்ஸிற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நெஸ்லே இந்த விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.