விவசாயிகளுக்கு சப்ளை செய்வதற்காக 'சிறுநீர் சேகரிப்பு திட்டம்'.. மகாராஷ்டிர அரசு முடிவு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய நிலங்களுக்கு மனிதனின் சிறுநீரை பாசனமாக பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மும்பை போன்ற நகரங்களிலுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சிறுநீர் சேகரிக்கப்பட்டு அவை கிராமங்களுக்கு சப்ளைசெய்யப்பட உள்ளன.
பயிர்களுக்கு சிறுநீர் ஒரு நல்ல டானிக் போன்றது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் கூறியிருந்தார். டெல்லியில் தான் தங்கியுள்ள பங்களாவிலுள்ள செடிகளுக்கு சிறுநீரைத்தான் ஊற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சத்துமிக்கதாம்
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு விவசாய ஆராய்ச்சியாளர்களும், கட்காரி கருத்தில் உண்மையுள்ளது என்று கூறியுள்ளனர். சிறுநீரிலுள்ள சிலவகை சத்துக்கள், பயிர்களுக்கு உகந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம்
இந்நிலையில், மகாராஷ்டிர விவசாய துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறுகையில், "மராட்டிய மாநிலத்தில் புதிய விவசாய கொள்கை கொண்டுவர உள்ளோம். அதன்படி, பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உம் கலக்காமல் விவசாயம் செய்வோருக்கு 35 சதவீத மானியம் வழங்க உள்ளோம்.
இயற்கை இருக்க செயற்கை எதற்கு
இயற்கை முறையில், விவசாயம் செய்ய மாட்டு சானம், ஆட்டு புழுக்கை, விவசாய வீண் பொருட்கள் போன்றவற்றை உரமாக பயன்படுத்தலாம். வேப்பிலை போன்றவற்றில் இருந்து இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்தை தயாரிக்கலாம். இதைத்தான் முன்பு விவசாயிகள் செய்து வந்தனர்.
இங்க புடி.. அங்க செடி
இந்த நடைமுறையில், சிறுநீர் பாசனமும் முக்கியமானது. மனிதனின் சிறுநீரிலுள்ள சத்துக்களை பயிர்களுக்கு அளித்தால் அவை சிறப்பாக வளரும். எனவே, மும்பை போன்ற நகரங்களிலுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மொத்தமாக சேரும் சிறுநீரை, கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களுக்கு சப்ளை செய்ய உள்ளோம்.
விரைவில் வருகிறது திட்டம்
அமைச்சரவையில், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற பிறகு மாநிலம் முழுமைக்கும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும். கட்காரி கூறியதில் எந்த தவறும் கிடையாது. அவர் உண்மையைத்தான் சொல்லியுள்ளார். இவ்வாறு ஏக்நாத் கட்சே தெரிவித்தார். மகாராஷ்டிராவிலும் பாஜக அரசுதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.