மலப்புரம் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி.. பாஜகவுக்கு 3-வது இடம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக மலப்புரம் தொகுதியில் போட்டியிட்ட பி.கே குன்ஹாலிகுட்டி 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார்
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான அகமது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவர் வெற்றி பெற்ற மலப்புரம் தொகுதியில் கடந்த 12-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது.
இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்சாலிகுட்டி வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் பைசலும், பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஸ்ரீபிரகாசும் போட்டியிட்டனர். கடுமையான போட்டி நிலவிய இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெற காங்கிரஸ் கூட்டணி கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டது.
இடைத்தேர்தலில் இத்தொகுதியில் 71.33 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. முதல் சுற்றிலேயே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்று 1,71,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 5, 15,325 வாக்குகள் பெற்றிருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பைசல் 3, 44, 287 வாக்குகளும், 3- வது இடம் பிடித்த பாஜக வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 65,662 வாக்குகளும் பெற்றனர். மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வரும் வேளையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல்களில் அந்த கட்சி தோல்வியுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜம்மு காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்திருப்பது அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.