நடிகை பாவனா கடத்தல் வழக்கு- மலையாள நடிகர் திலீப் அதிரடி கைது!
திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகையான பாவனா கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் ஓடும் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கும் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை அவர் மறுத்தார். அதே நேரத்தில் பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீசில் நடிகர் திலீப் புகார் செய்தார்.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், நடிகர்கள் திலீப், நாதிர் ஷா மற்றும் முன்னாள் மேலாளர் அப்புனி ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். கடந்தவாரம் நள்ளிரவு 1 மணி வரை மூன்று பேரிடமும் அலுவாவில் உள்ள போலீஸ் முகாமில் விசாரணை நடத்தப்பட்டது. விசாணையில் போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்தன.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நாதிர்ஷா அளித்த சில தகவல்களில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்திலும், பாவனாவை பாலியல் தொல்லை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தும் கடையில் கொடுத்தாக கூறியிருந்தது.
இதையடுத்து திலீப்புக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து இன்று காலை முதல் நடிகர் திலீப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.