ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை திரும்ப பெறுக: மம்தா பானர்ஜி #StopDemonetisation
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நாட்டில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இருவர் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் பற்றி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். டுவிட்டரில் #StopDemonetisation என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது.
போராட்டத்தில் பேசிய மம்தா, ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை மத்திய அரசு தீர்க்க வேண்டும் என்று கூறினார். மக்களின் வேதனையில் தானும் பங்கேற்பதாக குறிப்பிட்ட மம்தா, நாட்டில் அரசியல் சட்ட நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நாட்டில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய மம்தா, பணத்திற்காக திண்டாடும் மக்களை நேரடியாக சந்தித்து அந்த துன்பத்தை உணர்ந்ததாக மம்தா வேதனை தெரிவித்துள்ளார்.
மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் முடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பாரதிய ஜனதா அளித்த நல்ல நாள் வாக்குறுதி இது தானா என கேள்வி எழுப்பினார். நாடு முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி செல்வதாக கூறிய அவர், காய்கறி சந்தைகளை மூடிவிட்டால் மக்கள் எதனை சாப்பிடுவது என்று கேட்டார்.
ஒரு நாளுக்கு 4500 வரை பழைய பணத்தை மாற்றி கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி 2 ஆயிராமாக குறைத்துள்ளதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். நாட்டில் நூற்றுக்கு 4 பேர் தான் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். நிலைமை இப்படி இருக்க அரசின் இந்த அறிவிப்பால் அவசர நிலை காலத்தை விட தற்போது நாட்டில் மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரையும் மோடி திருடர்கள் என நினைக்கிறாரா என கேள்வி எழுப்பிய அவர், தங்களை சிறையில் போட்டாலும் துப்பாக்கியால் சுட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார். இந்தியாவை பிரதமர் மோடி 100 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது நாட்டில் ஏழை, அடித்தட்டு மக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.