பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று சந்திப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளார். மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரம் குறித்து அவர் மோடியிடம் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவில் இருந்து மமதா பானர்ஜி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா, தலைமை செயலாளர் சஞ்சய் மித்ரா ஆகியோர் அடங்கிய குழுவினரும் சென்றனர்.
முன்னதாக, கொல்கத்தா விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், புதிதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம் ஒன்றை அவர் திறந்து வைத்தார். அப்போது, மமதா பேசியதாவது:
நமது உரிமைகளை பெறுவதற்காக, பிரதமரை சந்திக்க உள்ளேன். யாசகம் கேட்பதற்காக, நான் டெல்லிக்கு போகவில்லை.
நாங்கள் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்து விட்டோம். ஏற்கெனவே ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடன் தொகையை நாங்கள் செலுத்தியிருக்கிறோம்.
மாநிலத்தில் முந்தைய ஆட்சியால், நம் மீது சுமத்தப்பட்ட பெரும் கடன்களை தள்ளுபடி செய்யும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமரை சந்திக்கும் மமதாவின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. மோடிக்கு ஆதரவாக மாறி, சி.பி.ஐ. யிடம் இருந்து முகுல் ராய் தன்னை பாதுகாத்துக் கொண்டார்.
அதேபாணியில், சி.பி.ஐ. பிடியில் இருந்து கட்சியை வெளியே கொண்டு வரவே இந்த சந்திப்பு என்று கூறியுள்ளார்.