"மம்தா பானர்ஜி செய்தது தவறு".. வார்னிங் தந்த தேர்தல் ஆணையம்.. நடவடிக்கை எடுக்க வாய்ப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் கட்ட வாக்கு பதிவின் போது முதல்வர் மம்தா பானர்ஜி நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது, அவர் கொடுத்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கண்டித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அஸாமில் 39 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேண்டு அதிகாரி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது.
இந்த வாக்குபதிவின் போது நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வாக்குப்பதிவின் போது மக்கள் சிலரை வாக்களிக்க விடாமல் தேர்தல் பணியாளர்களும் பாஜகவினரும் தடுப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் வைத்தார். வாக்களிக்க வந்த மக்களை இவர்கள் தடுத்து நிறுத்தியதாக மம்தா பானர்ஜி புகார் அளித்தார்.
போயல் பிரைமரி பள்ளியில் மக்களை வாக்களிக்க விடாமல் பாஜக தடுப்பதாக புகார் அளித்த மம்தா பானர்ஜி அங்கேயே தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குச்சாவடி மையத்திலேயே உட்கார்ந்து 2 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக கடிதம் மூலம் மம்தா பானர்ஜி புகார் அளித்தார்.
விஜய், அஜித், ரஜினி.. ஒரே பதிலில் 3 பேரையும் பாராட்டி.. அசால்ட்டாக "ஸ்கோர்" செய்த ஸ்டாலின்.. சூப்பர்
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் செயல்பாடு தவறு, அவரின் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கண்டித்து உள்ளது. மம்தா பானர்ஜி கொடுத்த புகார் தவறானது, அவர் கூறியது போல முறைகேடு எதுவும் நடக்கவில்லை. அவரின் செயல்பாடு தேர்தல் விதிகளுக்கு எதிரானது.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக மம்தா பானர்ஜி நடந்து கொண்டு உள்ளார். தேர்தலில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மம்தா பானர்ஜி நடந்து கொண்டு இருக்கிறார். நந்திகிராமில் மம்தா நடந்து கொண்ட விதம் குறித்து விசாரித்து வருகிறோம்.
சட்ட பிரிவு விதி 131, 123(2) இரண்டையும் இவர் மீறி செயல்பட்டு இருந்தால் மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகளை மம்தா மீறி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.