எல்லா முடிவையும் மோடி எடுத்துட்டு.. ஹர்ஷ் வர்த்தன் மீது பழி போட்டுட்டாங்க.. மம்தா பானர்ஜி விளாசல்
கொல்கத்தா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார்.
பாவம் ஓரிடம் பழி ஒரு இடமா என்று வகையில் கேள்வியெழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பெரிய அளவில் விஸ்தரிப்பு செய்யப்படுகிறது. 12 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.

மமதா கருத்து
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ மற்றும் தெபஸ்ரி சவுத்ரி ஆகிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதே நேரம் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 4 எம்பிக்கள் இணை அமைச்சர்கள் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி.

மோடி தலைமையில் கூட்டங்கள்
மம்தா பானர்ஜி கூறுகையில், ஆட்சி நிர்வாகம் நடத்துவதில் மத்திய அரசு சீரியஸாக இருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது. சுகாதாரத் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஆனால் இப்போது ஹர்ஷவர்த்தன் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். அவர் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். மத்திய அரசு மட்டும் சீரியஸாக வேலை பார்த்து இருந்தால் கொரோனா இரண்டாவது அலை வந்திருக்காது.

அடுக்கடுக்காக கேள்விகள்
பாபுல் மற்றும் தெபஸ்ரி சவுத்ரி ஆகியோர் திடீரென தவறு செய்துவிட்டதாக பாஜக மேலிடம் நினைக்கிறதா. இதனால்தான் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்களா, இவ்வாறு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பி இருக்கிறார் மம்தா பானர்ஜி.

வரிசையான குற்றச்சாட்டுகள்
கொரோனா இரண்டாவது அலை பரவிய காலகட்டத்தில் போதிய முன்னெச்சரிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் மத்திய அரசு சிக்கியது. தற்போது தடுப்பூசிகள் உரிய அளவுக்கு பங்கீடு செய்து தரப்படவில்லை, தட்டுப்பாடு நிலவுகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் சுகாதாரத்துறை உள்ளாகியிருக்கிறது. எப்போதுமே ஊரடங்கு உத்தரவு மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த மிகப்பெரிய பிரச்சினைகளின் போது தொலைக்காட்சிகளில் தோன்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுவது வழக்கம். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு, கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications