உறுதி... பிரதமர் வேட்பாளராகும் மம்தா! 2 ஆண்டுக்கு முன்பே இணையதளம் வழியாக துவங்கிய பிரசாரம்!
கொல்கத்தா: 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருவதாக கூறப்படும் நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இணையதளம் மூலம் ‛இந்தியாவுக்கு மம்தா தேவை' என பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
2014, 2019 மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த இரண்டு தேர்தல் வெற்றி மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 8 ஆண்டுகளாக பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.
“கவிஞர் மம்தா பானர்ஜி?” - இவருக்கு இந்த விருது கொடுத்தா எனக்கு வேணாம்.. கொந்தளித்த எழுத்தாளர்!
காங்கிரஸ் கட்சி மாநாடு
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இதனால் அந்த தேர்தல் மீது கவனம் செலுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துவங்கி உள்ளன.காங்கிரஸ் சிந்தனையாளர்கள் மாநாடு என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாள் மாநாட்டை நடத்தி வருகிறது. இதன்மூலம் கட்சியில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவும், மத்தியில் கூட்டணி அமைப்பது பற்றியும் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சந்திர சேகரராவின் முயற்சி
இதற்கிடையே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் மத்திய அரசியலில் ஆர்வம் காட்டியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் உள்ள பாஜகவுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிகளை ஓரணியில் சேர்த்து 2024 பொதுத்தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிேஷாருடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மம்தா பானர்ஜி
இவர்கள் தவிர2024 தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் இல்லாத மூன்றாம் அணியை உருவாக்க மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காய்நகர்த்தி வருகிறார். மேலும் அவர் பிரதமர் பதவி மீது கண்வைத்து செயல்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதை வெளிப்படுத்தும் வகையில் தான் சமீபத்தில் அவரது கட்சி நிர்வாகிகளும் மம்தா பானர்ஜி 2024ல் பிரதமராவார் என கருத்து தெரிவித்து இருந்தனர்.
இணையதளத்தில் இருப்பது என்ன?
இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 2024 மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கி உள்ளது. அதாவது 2024 மக்களவை தேர்தலில் திரிணாமுல் கட்சி பெங்காலின் சொந்த மகளை விரும்புகிறது. இந்தியாவுக்கு மம்தா வேண்டும் என்ற வாசகங்களுடன் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. அரசியலில் 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் மம்தா பானர்ஜி பிரதமராக களமிறங்குவார் என்பதை மக்களிடம் வெளிப்படுத்ததே இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Indiawantsmamatadi.com எனும் இணையதளம் மூலம் இந்த பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை
இதில், "2024ம் ஆண்டில் இந்தியாவின் முதல் வங்காள பிரதமராகி முழுமையான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு மம்தா பானர்ஜி வழங்கும் நல்லாட்சி அனைவருக்கும் கிடைக்க விரும்புகிறோம்'' என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையதளம் மூலம் மேற்கு வங்க மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தவும், இந்தியா முழுவதும் பிரசாரம் செய்யவும் முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர்.