ஜனநாயகத்தின் மீதான பாஜக தாக்குதல்கள்-இணைந்து முறியடிக்க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மமதா கடிதம்
கொல்கத்தா: ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான பாரதிய ஜனதா கட்சியின் தாக்குதல்களை ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு திரிணாமுல் காங். தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்கின்றன. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உக்கிரமாக பாஜகவை எதிர்த்து களத்தில் நிற்கிறது.
மமதா பானர்ஜி கடிதம்
தமிழகத்தில் திமுக கூட்டணி, பாஜக- அதிமுக அணியை எதிர்த்து களத்தில் நிற்கிறது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, திமுக- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சாடிப் பேசியிருந்தார். இந்த நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மமதா பானர்ஜி ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
மாநிலங்கள் அதிகாரம்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், டெல்லியில் மாநில முதல்வருக்கான அதிகாரம் இன்று பறிக்கப்பட்டுள்ளது. நாளை பிற மாநிலங்களின் அதிகாரமும் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பாஜகவிடம் இருந்து மாநிலங்களைப் பாதுகாக்க வேண்டும்.
திமுக திரிணாமுல் காங்-க்கு குறி
தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய பாஜக அரசு குறிவைத்து தாக்குகிறது. திமுக, திரிணாமுல் காங். தலைவர்கள் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. ஆனால் பாஜக தலைவர்களைப் பற்றி இந்த துறைகள் கண்டுகொள்வதே இல்லை.
பாஜக தொண்டர்களாக ஆளுநர்கள்
மேலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள், பாஜகவின் தொண்டர்களாகவே நடந்து கொள்கின்றனர். ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்புகள் மீதான பாஜகவின் தாக்குதல்களை முறியடிக்க ஒருங்கிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் மமதா பானர்ஜி.