மமதா ஒரு சர்வாதிகாரி... டெல்லியில் ஆட்சி நடத்த ஆசைப்படுகிறார்.. மேற்கு வங்கத்தில் விளாசிய மோடி
ஜல்பைகுரி:மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது, சர்வாதிகாரியாக செயல்படும் மமதா டெல்லி சென்று ஆட்சி நடத்த ஆசைப்படுகிறார் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் வன்முறை தலை விரித்தாடுகிறது. சர்வாதிகாரமான ஆட்சிதான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் வளர்ச்சி பணிகள் தான் எங்களின் நோக்கம். மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள நிதி முறையாக செலவிடப்படவில்லை. இந்த மாநிலத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது... கம்யூனிஸ்ட் கட்சியின் 2ம் பாகம் தான். சாரதா சிட்பண்ட் மூலம் மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
சிபிஐ விசாரணையை சந்திக்க மமதா அச்சப்படுவது ஏன்? பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களை இறங்க விடாமல் தடுக்கிறார். அவரது மிரட்டலுக்கு பாஜக தொண்டர்கள் ஒரு போதும் அச்சப்பட மாட்டார்கள். மேற்கு வங்கத்தை தொடர்ந்து, மமதா அடுத்து... டெல்லிக்கு சென்று ஆட்சி நடத்த நினைக்கிறார்.
ஊழல் புரிந்தவர்கள் மோடியை கண்டு அஞ்சுகின்றனர். முத்தலாக் விவகாரத்தில் காங்கிரசின் உண்மையான முகம் வெளிப்படையாக தெரிந்தது. முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களின் பாதிப்பை தடுக்க முடியும். இந்த சட்டத்தை காங்கிரஸ் திரும்ப பெற நினைக்கிறது. எந்த தியாகம் செய்தும் இந்த சட்டத்தை காப்போம் என்று மோடி பேசினார்.