ஜெயலலிதா பாணியில் மம்தா...மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பு ..கட்சியினர் அதிர்ச்சி
கொல்கத்தா: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில், அரசியலில் காய் நகர்த்தி வருகிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி.
ஆம்.. கடந்த மாதம் கட்சியில் சேர்ந்த இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்துள்ளார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவராகவும், தேசிய செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்தவர் சுஸ்மிதா தேவ். ஆனால், தனது கட்சிப் பொறுப்புகளை துறந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கடந்த மாதம் சுஸ்மிதா இணைந்துகொண்டார்.

அசாம் பொறுப்பு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அசாம் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பு சுஸ்மிதா தேவுக்கு, மம்தா பானர்ஜியால் வழங்கப்பட்டது. இப்போது அவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. சுஸ்மிதா, அசாம் மாநிலத்தின் சில்சார் தொகுதி எம்பி ஆக இருந்தவர். அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில் மீண்டும் எம்பி பதவியை வழங்க மம்தா பானர்ஜி முடிவு செய்து இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மகிழ்ச்சி
அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மிதா தேவ், ராஜ்யசபா எம்பியாக களமிறக்கப்படும் தகவல் வெளியிடப்பட்டது. அதை பகிர்ந்து கொண்ட அவர், மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், தனது தலைவர் மமதா பானர்ஜிக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் அதிகப்படியாக பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி நினைப்பதாகவும், தன்னால் முடிந்த பணிகளை தான் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பாணி
தமிழக அரசியலை பொருத்தளவில், அதிரடியான.. யாரும் எதிர்பார்க்க முடியாத.. நகர்வுகளை கொண்டு வருபவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுகவில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு கூட திடீரென்று உயர் பதவிகள் கிடைக்கும். முன்பின் அறிமுகமே இல்லாத பலரும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின் போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்களையும் வெற்றி வாகை சூட வைத்துவிடுவார் ஜெயலலிதா. இதேபோலத்தான் இப்போது மேற்கு வங்கத்திலும், மற்றொரு பெண் தலைவரான மம்தா பானர்ஜி, ஜெயலலிதா பாணியில், அதிரடியாக யாரும் கணிக்க முடியாத முடிவுகளை எடுத்து வருகிறார்.

யார் இந்த சுஷ்மிதா தேவ்?
முன்னாள் மத்திய அமைச்சர், மறைந்த சந்தோஷ் மோகன் தேவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பித்திகா தேவ் ஆகியோரின் மகள்தான் சுஷ்மிதா தேவ். அசாமின் சில்சார் முன்னாள் மக்களவை எம்.பி. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த அசாம் சட்டமன்றத் தேர்தலில் சில்சார் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த ராஜ்தீப் ராயிடம் தோற்றார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications