ராகுல் பேரணியில் துப்பாக்கியுடன் வந்த இளைஞரால் பரபரப்பு... கைது செய்து போலீசார் விசாரணை
பகாஹா : பீகாரில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி நடத்திய தேர்தல் பேரணியில் துப்பாக்கியுடன் வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பேத்காரின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை அடுத்து பீகாரில் ராகுல் காந்தி பேரணியை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் ராகுல் பேரணியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ராம் நகரில் நடந்த இச்சம்பவம் குறித்து பகாஹா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் சிங் கூறியதாவது...
பேரணி நடைபெறுவதற்கான ஹசாரி மைதானத்திற்கு ராகுல் காந்தி வருவதற்கு முன் முக்கிய நுழைவாயிலில் ஏர்கன் ரக துப்பாக்கியுடன் இருந்த இளைஞரை போலீசார் பிடித்தனர்.
அவர், அந்த மாவட்டத்தில் உள்ள ஜார்முஹி கிராமத்தைச் சேர்ந்த தய்யப் ஜான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி கொண்டு வந்தேன் எனவும் கூறுகிறார். இது குறித்து விரிவாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அந்த இளைஞரிடம் இருந்து பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் சில உடைகளும் மற்றும் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் இருந்துள்ளன. கைது செய்யப்பட்ட இளைஞரின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.