காரில் எரிந்த கணவன், வீட்டில் இறந்த மனைவி, குழந்தை: போலீசாருக்கு சவாலான மர்ம கொலை
நெய்டா: கணவன் விபத்தில் இறந்த செய்தியை குடும்பத்தாரிடம் கூறுவதற்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இறந்தவரின் மனைவியும், குழந்தைகளும் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்போது தெரியவந்தது.
டெல்லியருகே கிரேட்டர் நெய்டா நெடுஞ்சாலையில் கார் ஒன்று கருகி கிடந்தது. இதை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து காரை சோதனையிட்டபோது அடையாளம் தெரியாத அளவுக்கு காருக்குள் ஒரு நபர் கருகி இறந்து கிடப்பது தெரியவந்தது.
முகவரி கண்டுபிடிப்பு
காரின் சேசிஸ் எண்ணை வைத்து கார் வாங்கும்போது பதிவு செய்யப்பட்ட முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இறந்தவர் பெயர் நிதின் என்று தெரியவந்தது. இதையடுத்து நிதின் வசித்த வீட்டு முகவரிக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது, நிதின், குடும்பத்தோடு அந்த வீட்டை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.
போலீசாரின் தயக்கம்
நிதின் குடிபோன புதிய வீட்டு முகவரி குர்கான் பகுதியிலுள்ள பிரதிக் அடுக்குமாடு குடியிருப்பு என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். நிதின் மனைவியிடம் இந்த தகவலை எப்படி சொல்லப்போகிறோம், அதை அவர் தாங்குவாரா அல்லது அழுது புலம்புவாரா என்ற குழப்பத்தோடு போலீசார் நிதின் வீட்டுக்குள் சென்றனர்.
மர்ம சாவு
ஆனால் அங்கு போலீசார் கண்ட காட்சி, போலீசாரையே தூக்கிவாரி போட்டது. நிதின் மனைவி மற்றும் ஐந்துவயது குழந்தை அங்கு இறந்து கிடந்தது. அவர்கள் இருவரும் இறந்து சுமார் 3 நாட்களாவது இருக்கும்.
கொலைக்கு பின் தற்கொலையா?
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த நிதின் காரில் சென்றபோது விபத்தில் இறந்திருக்கலாம். அல்லது தற்கொலை \செய்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.
யதேர்ச்சையான நிகழ்வா?
நிதின் தற்செயலான விபத்தில் சிக்கி இறந்த அதே நேரத்தில், அவரது வீட்டில் கொலையாளிகள் யாராவது அவரது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து கொள்ளையடிக்க முற்பட்டிருக்கலாம். இரண்டையும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பதையும் மறுத்துவிட முடியாது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.