''ஐயா.. உங்க இ.பி பில் ரூ.55 கோடி.. கட்டிடுங்க.. இல்லாட்டி பியூஸ் பிடுங்கிடுவோம்''
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு ஒர்க்ஷாப் உரிமையாளருக்கு ரூ. 55 கோடிக்கு மின்சாரக் கட்டணம் வந்துள்ளதாக குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் மின்வாரிய ஊழியர்கள்.
இந்த தொகையானது ஜெய்ப்பூர் நகரின் மொத்த பில் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்காகும் என்பதுதான் ஷாக்கானது.
பில் கட்ட வேண்டிய கடைசி நாளுக்கு 2 நாட்கள் முன்பு இந்தப் பில்லைக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர் மின்வாரியத்தினர். இதைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார் பொகர்மால் சென்.
வழக்கமாக இவருக்கு மாதந்தோறும் ரூ. 12,000 முதல் ரூ. 18,000 வரைதான் பில் வருமாம். இதுகுறித்து சென் கூறுகையில், பில்லை வாங்கியதுமே நான் அப்படியே ஸ்தம்பித்து்ப போய் நின்று விட்டேன். உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினர். நேற்றுதான் எனது பில்லை சரி செய்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர் என்றார்.
இந்த குழப்பத்திற்கு வழக்கம் போல கம்ப்யூட்டர் மீது பழியைப் போட்டுள்ளனர் மின்வாரியத்தினர். இது டெக்னிக்கல் பிரச்சினைதான், சரி செய்து விட்டோம் என்றும் விளக்கியுள்ளனர். அதாவது டைப் அடிக்கும்போது தப்பாகி விட்டதாம்.