கழுத்தில் அட்டை.. அசால்டாக சாலையில் சென்ற நபர்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கின் போது இனிப்பு வாங்க வெளியில் சென்றவரின் வீடியோ வைரலாகியுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கின் போது இனிப்பு வாங்க வெளியில் சென்றவரின் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னரும் கூட திரிணாமுல் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சி இடையேயான யுத்தம் இன்னும் முடிந்தபாடில்லை. லஞ்சப் புகாரில் 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்ய, "என்னையும் கைது செய்யுங்கள்" என மம்தா செய்த தர்ணா ஊடகங்களின் தலைப்பு செய்தியானது.
ஆனால் நெட்டிசன்களுக்கோ அதே மேற்கு வங்கத்தில் நடந்த வேறொரு சம்பவம் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் ரவுண்டு கட்டி அடித்து வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்கு வங்கமும் விதிவிலக்கல்ல.
ஆனால், மேற்கு வங்க வாசிகள் இனிப்பு பிரியர்கள் என்பதால் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் ஸ்வீட் ஸ்டால்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை இனிப்பு கடைகள் திறந்திருக்க அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ
இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் ரவுண்டடித்து வருகிறது. அதில் ஆள் அரவமற்ற ஒரு சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மஞ்சள் நிற உடையணிந்த ஒரு நபர் மட்டும் முகக்கவசம் அணிந்தபடி தன்னந்தனியே சாலையில் நடந்து வருகிறார்.

இனிப்பு வாங்க
போலீசார் அவரைப் பார்த்து, "எங்கே போகிறாய்?" என அதட்டல் குரலில் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அந்த மனிதரோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல் தனது கழுத்தில் எழுதி தொங்கவிட்டுள்ள பேப்பர் ஒன்றைத் தூக்கி காட்டுகிறார். அதில், "நான் இனிப்பு வாங்கப் போகிறேன்", என வங்காள மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பிறகு போலீசார் அவரை அதட்டி அனுப்புகின்றனர்.

ஸ்வீட் எடு கொண்டாடு
இத்தனை ரணகளத்திலும் 'ஸ்வீட் எடு கொண்டாடு' மோடில் இருக்கும் அந்த மனிதரை நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். கொரோனாவால் நாடே பதறிப்போய் கிடக்க, இந்த மனிதருக்கு இப்போது ஸ்வீட் தான் ரொம்ப முக்கியமா? என வறுத்தெடுப்பவர்களும் உண்டு. அதேசமயம் போற உசுரு ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு போகட்டும் என ஆதரவு கரம் நீட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அல்டிமேட் சார் நீங்க..
ஆனால் இந்த வீடியோவைப் பார்க்கும் போது, நமக்கு சிரிப்பை மட்டும் அடக்க இயலவில்லை. அசால்டாக நடந்து வரும் அவரின் நடை, கோபமாக போலீஸ் கேட்டும்கூட அலட்டிக் கொள்ளாமல் பின்னால் கிடக்கும் பேப்பரை திருப்பிக் காட்டுவது என அந்நபரின் நடவடிக்கைகள், 'நீங்கள் அடித்தால்கூட பரவாயில்லை.. நான் இனிப்பு மட்டும் வாங்காமல் போக மாட்டேன்..' என இனிப்புகள் மீது கொண்ட அவரது ஆர்வத்தையே காட்டுகிறது.












Click it and Unblock the Notifications