பஸ் பயணத்தில் பிரச்சினையா?.. பட்டுன்னு அமுக்க "பேனிக் பட்டன்"... கட்காரி அறிவிப்பு
டெல்லி: பெண்களின் பாதுகாப்பு கருதி பொது போக்குவரத்து வாகனங்களில் அவசர கால (பேனிக்) பட்டன், சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ். கருவிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
அவசர கால பட்டன், சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட ராஜஸ்தான் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த 10 ஆடம்பர மற்றும் பத்து சாதாரண பேருந்துகளை மக்களின் பயன்பாட்டுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

பின்னர் கட்காரி செய்தியாளர்களிடம்கூறுகையில்,
டெல்லியில் நிகழ்ந்த நிர்பயா சம்பவத்திற்கு பிறகு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொது போக்குவரத்து வாகனங்களில் அவசர கால பட்டன், சி.சி.டி.வி. கேமரா, ஜி.பி.எஸ். கருவிகளை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 23 பயணிகள் அமரும் வகையில் உள்ள வாகனங்களில், சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி, அவசரகால பட்டன் பொருத்துவது கட்டாயமாக்கப்படும்.
இதன் மூலம் வாகனத்தில் பயணிக்கும் போது பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள், அவசரகால பட்டனை அழுத்தலாம். இந்த பட்டனை அழுத்தியவுடன் தகவல்கள், ஜிபிஎஸ் மூலமாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்றுவிடும். போலீசார் அந்த வீடியோக்களை நேரடியாக பார்த்து, ஜிபிஎஸ் மூலமாக வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இது தொடர்பாக ஜூன் 2-ம் தேதி மத்திய அரசின் சார்பில் அறிவிக்கை வெளியிடப்படும். வாகனங்களை தயாரிக்கும் போதே மேற்கூறிய பாதுகாப்பு சாதனங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தமாக அதிக அளவில் இது போன்ற கருவிகளை வாங்கினால் குறைந்த விலையில் அவற்றை பெறமுடியும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications