2ஜி ஊழல்.. மன்மோகன் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: சொல்வது ப.சிதம்பரம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இந்தியா டுடே குழுமத்தின் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய "2014: The Election That Changed India" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பாஜகவைச் சேர்ந்த தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிதம்பரம் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வித்தியாசமான முறையில் கையாளப்பட்டு விட்டது. 2ஜி ஊழல் வெளியானதும் மன்மோகன்சிங் பதவி விலகி மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும்.
2ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற வழியை நான் முன் நிறுத்திச் சொல்லவில்லை. லைசென்ஸ் வழங்கிய பின்பு அதில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்ததும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் அரசே லைசென்ஸ்களை ரத்து செய்து இருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் காங்கிரஸ் மீதான ஊழல் கறை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
லோக்சபா தேர்தலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காங்கிரசை மிகப்பெரிய அளவில் காயப்படுத்திவிட்டது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா, ராகுல், மன்மோகன்
அண்மையில் சோனியாவும் ராகுல் காந்தியும் மக்களிடம் நிறைய பேச வேண்டும்; காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வரலாம் என்று சிதம்பரம் கருத்து தெரிவித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை இலக்கு வைத்து சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications