மற்ற கட்சிகளிடம் பணம் வாங்கினாலும் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.. மனோகர் பாரிக்கரின் பேச்சால் சர்ச்சை !
கோவா சட்டசபை தேர்தலில் பிற கட்சிகளிடம் பணம் வாங்கினாலும் பாஜகவுக்கே வாக்களிக்குமாறு மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பனாஜி: கோவா சட்டசபைத் தேர்தலையொட்டி மற்ற கட்சிகள் பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறி இருப்பதுசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் கோவா மாநிலம் சிம்பெல் நகரில் பேசிய மனோகர் பாரிக்கர், கட்சிகள் நடத்தும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பணம் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார். ஆனால் வாக்களிப்பதற்கு பணம் பெற்றால், அதை வாங்கிக் கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரிக்கர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கோவாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பணம் வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கூறினார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த கேஜ்ரிவால், லஞ்சம் பெறுவதற்கு வாக்காளர்களை
ஊக்குவிக்கும் வகையில் பேசவில்லை. "பிற கட்சியிலிருந்து பணம் பெற்றுக் கொண்டாலும், ஆம் ஆத்மியின் தேர்தல் சின்னத்துக்கு (துடைப்பம்) வாக்களிக்குமாறு கோரினேன்' என பேசியதாக கேஜரிவால் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications