ஏங்க இப்படி.. குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களும், தேர்தல் ஆணையத்தை விரட்டும் கேள்விகளும்!
டெல்லி: குஜராத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இன்று அறிவித்தார்.
டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்றும் ஜோதி தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த 12ம் தேதியே செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி, நவம்பர் 9ம் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

தாமத அறிவிப்பு
இமாச்சல பிரதேசத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பின்போதே, குஜராத் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், குஜராத் தேர்தல் தேதி அன்று அறிவிக்கப்படவில்லை. இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான், குஜராத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் குற்றச்சாட்டு
குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இழுத்தடித்தன் பின்னணி குறித்து ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிஸ் மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பினர். நேரடியாக தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டினர். பாஜகவுடன், தேர்தல் ஆணையம் கை கோர்த்துக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். குஜராத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானால் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகளால், அம்மாநிலத்திற்கு அறிவிக்க முடியாது. எனவே கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கவே இந்த காலதாமதம் என்பது காங்கிஸ் குற்றச்சாட்டு.

வெள்ள பாதிப்பு
இன்று செய்தியாளர்களை அக்சல் குமார் ஜோதி சந்தித்தபோது, இதே கேள்வியை நிருபர்கள் முன் வைத்தனர். ஆனால், அவரோ குஜராத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண பணி பாதித்துவிட கூடாது என்பதால் தேர்தல் தேதியை அறிவிக்க தாமதம் செய்ததாக கூறினார். குஜராத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்டது ஜூலை மாத இறுதியில். ஆனால், இரு வாரங்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது குஜராத் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டிருந்தது.

நீண்ட இடைவெளி
இதேபோல இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ம் தேதியே தேர்தல் நடைபெற்றுவிட்ட போதிலும், டிசம்பர் 18ம் தேதிவரை வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்துவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலங்களில் இதுபோல வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடுவே மிக நீண்ட இடைவெளி விடப்படுவது இதுதான் முதல் முறை.

புரியாத புதிர்
குஜராத்தில் ஏன் 2 கட்ட தேர்தல் என்பதும் புரியாத புதிர்தான். 234 தொகுதிகளை கொண்ட தமிழகமே ஒரே கட்டமாக தேர்தலை சந்திக்கும்போது, 182 தொகுதிகளை கொண்ட குஜராத்திற்கு ஏன் 2 கட்ட தேர்தல்கள்? இதுபற்றி தேர்தல் ஆணையரிடம் கேட்டால், குஜராத்தில் பாலைவனம், கடலோர பகுதிகள் இருப்பதால் இப்படி செய்வதாக கூறுகிறார். மலைப்பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதுதான் கஷ்டம். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறதே.
மேலும், கடந்த சில தேர்தல்களிலும் குஜராத்தில் இப்படித்தான் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்திலும் இதற்கு அவசியம் இல்லை என்பதே பொதுவான கருத்து. ஏனெனில், வாக்காளர்கள் மனநிலையை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்களால் இதுபோன்ற சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications