தமிழக எதிர்க்கட்சியினர் குரங்குகளாம்.. ஜெயலலிதா பற்றியும் மோசமாக கமெண்ட் அடித்த கட்ஜு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிங்கமென்றும், எதிர்க்கட்சியினரை பபூன் குரங்குகள் எனவும் அநாகரீக வார்த்தைகளால் வர்ணித்துள்ளார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.
நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு பொழுதுபோக அவதிப்படும், கட்ஜு, பேஸ்புக், டிவிட்டர் மூலம் சர்ச்சை கருத்துக்களை கூறி, தனது பெயர் எல்லா சர்ச்சைகளின் நடு நாயகமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பேர்வழி.
இந்த வெற்று விளம்பர புகழ்ச்சிக்காக, பிறர் மனது எந்த அளவு வேதனைப்பட்டாலும் அதுகுறித்து கவலைப்படுவதாக இல்லை கட்ஜு. யாரையாவது அல்லது குறிப்பிட்ட சமூகத்தையாவது மோசமாக விமர்சனம் செய்யவும் தயங்கமாட்டார் அவர்.

நீதிமன்றத்தை கண்டித்தார்
சமீபத்தில் தமிழர்களை தாழ்த்தியும், மலையாளிகளை உயர்த்தியும் பதிவிட்டிருந்தார் கட்ஜு. அதேபோல காவிரி பிரச்சினையில், உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பித்த தருணங்களில், குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டபோது, நீதிமன்றத்தை விமர்சனம் செய்தார். கர்நாடக மக்கள் அப்பாவிகள் என்பதை போலவெல்லாம் பதிவிட்டார்.

பேஸ்புக்கில் பதிவு
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா குறித்தும், தமிழக எதிர்க்கட்சிகள் குறித்தும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் மார்கண்டேய கட்ஜு. "ஜெயலலிதா ஒரு சிங்கம், அவரின் எதிர்க்கட்சியினர் பபூன் குரங்குகள்.

சிறு வயதில் கவர்ந்தவர்
ஜெயலலிதா உடல் நலம் சரியாக மீண்டும் பணிக்கு திரும்புவார். நான் இளைஞனாக இருந்தபோது, ஜெயலலிதாவும் இளம் வயது பெண். அவர் என்னை மிகவும் கவர்ந்தார்" இவ்வாறு கூறிய கட்ஜு, அதன்பிறகு தேவையற்ற வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து "எனது எண்ணம் பற்றி ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. நான் இன்னும் அவர் மீது ஈர்ப்பு கொண்டுள்ளேன். அவர் மீது இன்னமும் அன்பு வைத்துள்ளேன். அவர் விரைந்து குணமடைய வேண்டும்" இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.

என்ன மாதிரி நபர் இவர்?
திருமணமே செய்துகொள்ளாமல் பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரை, அதுவும், மருத்துவமனை படுக்கையிலுள்ள ஒரு பெண்மணியை பற்றி, கட்ஜு இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரானது
மேலும், ஜனநாயகத்தில் ஆளும் கட்சிக்கு ஈடான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் ஆட்சியை மீண்டும் பிடித்துவிட்டதாலேயே, ஜெயலலிதாவை சிங்கம் என்றும், ஆட்சியை பிடிக்க முடியாததாலேயே எதிர்க்கட்சியினரை பபூன் குரங்குகள் என கூறுவதும், ஜனநாயக கட்டமைப்புக்கே எதிரானது என்பது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய கட்ஜுக்கு தெரியாமல் போனது எப்படி?

போஸ்ட்டை நீக்கினார்
இதனிடையே, கட்ஜுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்ததால், பேஸ்புக்கில் இருந்த அந்த போஸ்ட்டை நீக்கியுள்ளார் அவர். இவரது விளம்பரத்திற்கு அலைபாயும் மனது எங்கு கொண்டு சென்றுவிடும் என்பதை, வருங்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications