வேற லெவல் வெட்டிங்.. கூகுள் மீட்ல திருமணத்தில் கலந்துக்கலாம்.. சாப்பாடு ஜோமோட்டோல வீட்டுக்கே வரும்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் 24-ஆம் தேதி நடைபெறும் திருமணத்தில் கூகுள் மீட்டில் கலந்து கொண்டால், கல்யாண சாப்பாடு ஜொமாட்டோ மூலம் வீடு தேடி வரும். இதெல்லாம் வேற லெவல் இல்ல?
முன்பெல்லாம் திருமணங்களின் போது நிறைய சடங்குகள் இருந்ததால் குறைந்தபட்சம் 3 தினங்களாவது மண்டபத்தை பிடித்து, உறவினர்களை வைத்து திருமணங்கள் நடத்தப்படும். இது நாளடைவில் குறுகி ஒன்றரை நாள் ஆகிவிட்டது.
ஸ்கூலுக்கு வாங்க.. மகாராஷ்டிராவில் 4 நாட்களில் திறக்கப்படும் பள்ளிகள்.. தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?
தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து திருமணங்களை ஆன்லைன் மூலம் கண்டு களித்து மொய் பணத்தை அவர்கள் சொல்லும் கூகுள் பே அக்கவுண்ட்டில் போடுமாறு பத்திரிகைகளிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆன்லைனில் திருமணங்கள்
இந்த ஆன்லைனில் திருமணங்கள் நடத்தப்படுவதால் திருமண விருந்து எனப்படுவது கிடைக்காமலேயே போய்விடுகிறது. சாப்பாடுதானே என்றாலும் ஒரே நேரத்தில் பல விதமான உணவு வகைகளை சுவைப்பதே அலாதிதான். திருமண விருந்து குறையை போக்க தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.
திருமண வீட்டார்
மேற்கு வங்கத்தை சேர்ந்த புர்துவான் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப்ன் சர்கார் மற்றும் அதிதி தாஸ் ஆகியோருக்கு வரும் 24 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி என்றால் 100 பேர் மட்டுமே நேரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்ற ஒரு விதி அமலில் இருந்ததால் திருமண வீட்டார், நெருங்கிய சொந்தங்கள் 100 பேரை மட்டும் அழைக்க முடிவு செய்தனர்.
கூகுள் மீட்டில் திருமணம்
அதற்காக மற்ற சொந்தங்களை ஒதுக்கி விடமுடியாதே. அதனால் ஒரு 250 பேருக்கு கூகுள் மீட் லிங்குகள் இரண்டு உருவாக்கப்பட்டு அதை திருமண அழைப்பிதழிலும் இடம் பெற செய்துவிட்டனர். திருமணத்திற்கு கூகுள் மீட் சரி, கல்யாண சாப்பாட்டுக்கு என்ன வழி என்ற போது, இவர்கள் திருமண மண்டபத்தில் சமைக்கும் உணவுகளை நேரடியாக வந்த 100 பேர் சுவைப்பதும் மற்ற உணவுகளை ஜொமாட்டோ டெலிவரி நிறுவனம் மூலம் வீட்டுக்கே கொண்டு போய் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எனவே உறவினர்கள் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்களுக்கு அந்த ஊரில் உள்ள ஜொமாட்டோ டெலிவரி நிறுவனத்தின் மூலம் கல்யாண சாப்பாடு வழங்கப்படுகிறது. இதுகுறித்து சந்தீபன் கூறுகையில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த 4ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். மேற்கு வங்கத்தில் திருமண நிகழ்ச்சியில் 200 பேர் கலந்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூகுள் மீட்டில் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்தோம். நான் மட்டும் அல்ல , நான் திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண் அதிதியின் தந்தையும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.
விருந்து என்ன
திருமணத்தை கண்டு களிக்கவும் விருந்துக்கும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. திருமணத்திற்கான கிப்ட்கள், மொய் பணத்தை எப்படி பெறுவது என்பது குறித்து இவர்கள் ஐடியா செய்துள்ளனர். மொய் பணத்தை ஜி பே மூலமும், கிப்ட்களை பிளிப்கார்ட் மூலமும் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள். மீன், மட்டன், சிக்கன், நான், புலாவ், சாதம் உள்ளிட்டவைகளுடன் 4 டெஸர்ட்டுகளும் இரு வகையான ரசகுல்லாக்களுடன் பரிமாறப்படுகிறது.