மேகாலயா சட்டசபையில் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டம்- ஆளுநரின் இந்தி உரைக்கு எதிராக வெளிநடப்பு!
மேகாலயா சட்டசபையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் வெடித்தது.
ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில் இந்தி மொழியில் ஆளுநர் பாகு சவுகாரன் உரை வாசிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து 4 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேகாலயா சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற என்பிபி தலைமையில் பாஜக, சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி ஆட்சி பதவியேற்றது. மேகாலயா முதல்வராக மீண்டும் கான்ராட் (கன்ராட்) சங்மா பதவியேற்றார்.
மேகாலயாவில் புதிய அரசு பதவியேற்ற நிலையில் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. இந்த முதல் கூட்டத் தொடர், மாநில ஆளுநர் பாகு சவுஹான் (பகு சவுகான்) உரையுடன் தொடங்கியது. ஆளுநர் பாகு சவுகான், இந்தி மொழியில் ஆளுநர் உரையை வாசித்தார். இது மேகாலயா சட்டசபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்க்கட்சிகளில் ஒன்றான விபிபி கட்சி எம்.எல்.ஏக்கள் 4 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேகாலயா மாநிலத்தின் காசி, காரோ மொழிகளை 8-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என நாங்கள் போராடி வருகொறோம். அஸ்ஸாமிய மொழித் திணிப்புக்கு எதிராகவும் போராடுகிறோம். அஸ்ஸாம் மொழித் திணிப்பில்தான் மேகாலயா தனி மாநிலமே உருவானது. இந்த நிலையில் எங்களுக்கு புரியாத மொழியில் ஆளுநர் உரையை வாசித்தால் எப்படி ஏற்க முடியும்? என கொந்தளித்தனர்.
மேலும் மேகாலயா மாநிலம், இந்தி மொழி பேசுகிற மக்களைக் கொண்ட மாநிலம் அல்ல. இம்மாநிலத்தில் தனித்துவமான மொழிகள் பேசப்படுகின்றன. ஆகையால் எங்களுக்கு புரிந்த மாநில மொழிகளில்தான் ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினர். ஆனால் இதனை முதல்வர் கான்ராட் சங்மா, சபாநாயகர் தாமஸ் சங்மா நிராகரித்தனர். ஆளுநர் பாகு சவுகான் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த வேண்டும் என்பதும் சாத்தியமற்றது என்றனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த 4 எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
பட்டப்பகலில் கழுத்தறுத்து ஆணவக்கொலை.. நெஞ்சு பதறுதே.. கொலைக்களமா தமிழ்நாடு? எடப்பாடி பழனிசாமி வேதனை!
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எம்.எல்.ஏ.க்கள், இந்தி பேசும் ஆளுநர்களை எங்கள் மாநிலத்துக்கு நியமிக்க கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்தி பேசாத மாநில சட்டசபையில் ஒரு ஆளுநர் இந்தி மொழியில் பேசுகிறார். அது தங்களது மாநிலத்துக்கு அவமானம் என நினைக்க வேண்டும். அப்படியான தன்மான உணர்வு இருப்பதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றனர்.