'தாலிபான்கள் ரியல் ஷரியா சட்டத்தை பின்பற்றினால்.. உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும்..' மெகபூபா முப்தி
ஸ்ரீநகர்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் உண்மையான ஷரியா சட்டத்தைப் பின்பற்றி ஆட்சி செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஷரியா சட்டம் பெண்களுக்கான உரிமையை உறுதி செய்வதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Recommended Video
வரும் செப், 11ஆம் தேதியுடன் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் முடிகிறது. சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கையை மாற்றியமைத்த தாக்குதல் என்றால் அது இரட்டை கோபுர தாக்குதல் தான்.
இந்தத் தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். உலக வல்லரசான அமெரிக்காவில் பாதுகாப்பு முறைகளில் இருந்து குறைபாடுகளை இந்த தாக்குதல் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

20 ஆண்டுகள் தொடர்ந்த போர்
இந்தத் தாக்குதலுக்குப் பின்னரே ஆப்கானிலுள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தத் தாக்குதலுக்கும் அப்போது ஆப்கனில் இருந்த தாலிபான்களுக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை. இருந்தாலும்கூட, அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் ஆப்கனில் தங்கி, பயிற்சி பெறத் தாலிபான்கள் ஆதரவாக இருந்தனர். இதன் காரணமாகவே ஆப்கன் மீது படையெடுத்த அமெரிக்கா, தாலிபான் ஆட்சியையும் கலைத்தனர். சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த போர் இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.

புதிய அரசு
ஆப்கனில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறத் தொடங்கியது. இத்தனை ஆண்டுகள் இதற்காகவே காத்திருந்த தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். பல்வேறு பகுதிகளிலும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கன் படைகள் போராடவில்லை. இதனால் மளமளவென பல்வேறு பகுதிகளையும் தாலிபான்கள் கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்களே ஆப்கனை கைப்பற்றி இருந்த நிலையில், புதிய அரசு குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

ஷரியா சட்டம்
முல்லா முகமது ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996 - 2001 வரையிலான ஆட்சியைப் போல இம்முறை இருக்காது என தாலிபான்கள் கூறியுள்ளனர். அதேநேரம் ஜனநாயக முறையில் ஆட்சி இருக்காது எனத் தெரிவித்த தாலிபான்கள், ஷரியா சட்டப்படியே ஆப்கனில் ஆட்சி நடைபெறும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால் பெண்கள் உரிமை பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் அதிகரித்தது,

உண்மையான ஷரியா சட்டம்
இந்நிலையில், உண்மையான ஷரியா சட்டத்தில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதைப் பின்பற்றி ஆட்சி நடத்த வேண்டும் என்றும் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தாலிபான்கள் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளனர், அது தான் உண்மை. அவர்களின் முதல் ஆட்சிக் காலம் மனித உரிமைக்கு எதிரானதாக இருந்தது. அதேநேரம் தாலிபான்கள் இப்போது ஆப்கானிஸ்தானை ஆள விரும்பினால், அவர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ள உண்மையான ஷரியா சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உரிமைகளை உறுதி செய்யும்.

உலகிற்கே முன்மாதிரியாக ஆட்சி
மதீனாவில் இருந்த முகமது நபியின் ஆட்சியைத் தாலிபான் பின்பற்றினால், அது உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும். சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றால் இஸ்லாம் மற்றும் சரியா சட்டத்திற்கு அளிக்கும் கடுமையான விளக்கத்தைத் தாலிபான்கள் தவிர்க்க வேண்டும் இல்லையென்றால், அது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு விஷயங்களைக் கடினமாக்கும்" என்று முப்தி கூறினார்.












Click it and Unblock the Notifications