ஜெ.வைப் பார்க்க திரண்டு வந்த அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள்.. அனைவருக்கும் 'நோ என்ட்ரி'!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்க்க இன்று அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்பட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரண்டு வந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட இன்று நல்ல கூட்டம் காணப்பட்டது. இவர்களால் சிறைக்குச் செல்லும் வழியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கும், ஹோட்டல்களிலு் நல்ல வியாபாரமும் நடந்ததைக் காண முடிந்தது.
கடந்த சில நாட்களாக கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இன்று மீண்டும் களை கட்டிக் காணப்பட்டது. அமைச்சர்கள் பா. வளர்மதி, பழனியப்பன், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் வந்திருந்தனர்.
வளர்மதி உள்ளிட்டோர் அம்மாவைப் பார்க்க விரும்புவதாக கூறி துண்டுச் சீட்டை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து அனுப்பினராம். ஆனால் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்.
இதனால் அவர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்து அவரவர் வண்டியில் ஏறிச் சென்றதைக் காண முடிந்தது.