"உங்களில் யார் யோக்கியரோ, அவர்கள் மட்டும் குமாரசாமி மீது கல்லெறியுங்கள்...!"
பெங்களூர்: மேலவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க தனது கட்சிக்காரரிடமே ரூ.40 கோடி பணம் கேட்ட விவகாரத்தில் எந்த மாதிரியான விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக மேலவையில் காலியாக இருந்த 7 பதவி இடங்களுக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது.இதில், தேவகவுடா தலைமையிலான, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் மல்லிகார்ஜுன் என்பவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பிஜாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர் விஜுகவுடா பட்டீலுக்கு எம்.எல்.சி. பதவி வழங்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் முன்னாள் முதல்வரும் கட்சியின் முன்னணி தலைவருமான குமாரசாமியை சந்தித்து கேட்டனர்.
உரையாடல் சி.டி. அம்பலம்
இந்த சந்திப்பின்போது. மேலவை தேர்தலில் ஓட்டுப்போட ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ரூ.1 கோடி கேட்பதாகவும், இதனால் 40 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க ரூ.40 கோடி தேவை என்றும் விஜுகவுடாவின் ஆதரவாளர்களிடம் குமாரசாமி பேசுவது போன்ற உரையாடல் அடங்கிய சி.டி. கன்னட தொலைக்காட்சி சானல்களில் வெளியானது. இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறிக்கை கேட்கிறது உள்துறை அமைச்சகம்
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி கர்நாடக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கோரி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த குமாரசாமி "பணம் குறித்து பேசியது நான்தான். ஆனால் இதுவரை பணம் பெறவில்லை. மேலும், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளுமே பணம் பெற்றுக்கொண்டுதான் எம்.எல்.சிக்களை தேர்ந்தெடுக்கின்றன. நான் பயமே இல்லாமல் இதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். மற்றவர்கள் கூறுவதில்லை, அவ்வளவுதான். நடைபெற்றுவரும் சட்டசபை கூட்டத்தொடரில் இது குறித்து யாராவது பிரச்சினை கிளப்பினால் அங்கே அவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும். இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயார்" என்றார்.
காங்., பாஜக குற்றச்சாட்டு
காங்கிரசை சேர்ந்த, முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் அனந்தகுமார் உள்ளிட்டோர் குமாரசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது மீது தவறை வைத்துக்கொண்டு பிறர் மீது குற்றம் சொல்லுவதா என்று அவர்கள் கோபம் வெளிப்படுத்தினர்.
அப்போ நீங்க?
இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி எம்.எல்.ஏக்களுமே தங்கள் மேலிட உத்தரவை மீறி தொழிலதிபரிடம் 'விசுவாசத்தை' காண்பித்த சம்பவம் இதே கர்நாடகாவில் நடந்துள்ளது.
சொந்த கட்சிக்கே சூனியம்
2012, ஜூன் மாதம் கர்நாடக மேலவையில் காலியாக இருந்த 11 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அப்போது, காங்கிரஸ் சார்பில் தனது எம்.எல்.ஏக்கள் பலத்துக்கு தக்கபடி 3 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவரான இக்பால் அகமது சரடகி தோல்வியுற்றார், சுயேச்சை வேட்பாளர் பி.எஸ்.சுரேஷ் வெற்றி பெற்றார்.
கருப்பு ஆடுகள்
விசாரித்து பார்த்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 5 பேர் தங்கள் கட்சிக்காரருக்கு வாக்களிக்காததும், ஒருவர் வேண்டுமென்றே செல்லாத வாக்கு போட்டதும் தெரியவந்தது. அதேபோல பாஜக எம்.எல்.ஏக்கள் 12பேர் தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை. இருப்பினும் போட்ட ஓட்டுக்களே நிறுத்திய வேட்பாளர்களுக்கு போதுமானதாக இருந்ததால் பாஜகவில் யாரும் தோற்கவில்லை.
போடுங்கம்மா ஓட்டு.. தொழிலதிபரை பார்த்து..
இப்படி மாங்கு மாங்கென்று சுயேச்சை வேட்பாளருக்கு பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க காரணம் என்ன? அந்த சுயேச்சை வேட்பாளர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இது ஒன்றுதான் காரணம். அதே நேரம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் அகமது சரடகி, இருமுறை மக்களவை எம்.பியாக பதவி வகித்தவர். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் அதைப்பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவலைப்படவில்லை.
மத்தியிலும் இப்படித்தான்..
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. அவ்வளவு ஏன் கேள்வி கேட்க கூட எம்.பி.க்கள் லஞ்சம் பெற்ற வரலாறு உள்ளது.
தவறை ஒப்புக்கொள்ள தைரியம் வேணும் பாஸ்..
இருப்பினும் இதை தைரியமாக ஒப்புக்கொண்ட குமாரசாமிக்கு சபாஷ் போட்டே ஆக வேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ள ஆரம்பிக்கும் புள்ளியில்தான், தவறுகளை திருத்தும் பாதை ஆரம்பிக்கிறது. ஆனால் அரசியலுக்காக குமாரசாமிக்கு எதிராக காங்கிரசும், பாஜகவும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. "உங்களில் யார் யோக்கியரோ அவர்கள் முதலில் குமாரசாமி மீது கல்லெடுத்து எறியுங்கள்" என்கின்றனர் மஜதவினர்.