மணிப்பூரில் முதல்வர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட பகுதியில் தீ வைப்பு.. பதற்றம் அதிகரிப்பு.. 144 தடை
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றம் அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக என்.பிரேன் சிங் உள்ளார். இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பிரேன் சிங் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், முதல்வர் பங்கேற்க இருந்த இருந்த பொதுக்கூட்ட மைதானத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சேர்களும் உடைத்து துவசம் செய்யப்பட்டன. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144-தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்ததால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், மற்றும் சதுப்பு நிலப்பகுதிகள் குறித்த கணக்கெடுப்பை ஆளும் பாஜக அரசு நடத்தி வருகிறது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், தான் முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மைதானத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், சுராசந்த்பூர் மாவட்டத்தில் இணைய தளமும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வனப்பகுதிகளில் சதுப்பு நிலங்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்பிற்கும் பழங்குடியின தலைவர்கள் அழைப்பு விடுத்து இருக்கின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications