மக்களுடன் தொடர்புடைய கட்சி பாஜக மட்டுமே, காங். அல்ல- மோடி
பெங்களூர்: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெங்களூர் அரண்மனை மைதானத்தில் இன்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.
பாட்னா கூட்டத்தின்போது தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து அவரது பெங்களூர் கூட்டத்திறகு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
லட்சக்கணக்கானோர் அரண்மனை மைதானத்தில் கூடியுள்ளனர். மோடி மைதானத்திற்கு வந்தபோது கரகோஷங்கள் விண்ணைப் பிளந்தன. மோடி தனது பேச்சை கன்னடத்தில் தொடங்கி கர்நாடகத்தின் மாபெரும் தலைவர்களைப் பாராட்டி பேச்சைத் தொடங்கினார்.
மோடியின் பேச்சு....
சச்சினுக்கு வாழ்த்து
பாரத ரத்னா விருது பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், பேராசிரியர் சிஎன்ஆர் ராவ் ஆகியோரை நான் பாராட்டுகிறேன்.
சிலிக்கான் வேலிக்குப் பிறகு பெங்களூர்
சிலிக்கான் வேலிக்குப் பிறகு உலகிலேயே தகவல் தொழில்நுட்பத் துறைக்காகவே உள்ள ஒரு ஊர் எது என்றால் அது பெங்களூர் மட்டுமே. இதற்குக் காரணம், வாஜ்பாய் ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பத்துறைக்காகவே தனியாக ஒரு அமைச்சகத்தை பிரதமர் வாஜ்பாய் ஏற்படுத்தியதுதான். இதனால்தான் பெங்களூர் இந்த அளவுக்கு வளர காரணமாகும்.
தனியாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தையும் வாஜ்பாய் அரசுதான் கொண்டு வந்தது. அதேபோலத்தான் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தையும் வாஜ்பாய் அரசு உருவாக்கியது.
ஜனநாயகத்தைக் கொலை செய்யும் காங்.
ஜனநாயகத்தை இன்று குழி தோண்டிப் புதைக்கும் வகையில் நடந்து கொள்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதுதான் காங்கிரஸ் வழி ஜனநாயகப் பாதை போலும்.
இதற்கு முன்பும் ஜனநாயகத்தை சிதைத்துள்ளது காங்கிரஸ். இப்போதும் அதையே செய்கிறது. நாட்டை மிசா காலத்திற்கு மீண்டும் கூட்டிச் செல்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை.
சமூக வலைத்தளங்கள், மீடியாக்கள் மீ்து அடக்குமுறையை ஏவி வருகிறது காங்கிரஸ்.--
சிபிஐயை வைத்து மிரட்டுகிறார்கள்
சிபிஐயை இன்று காங்கிரஸார் தங்களது பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத தலைவர்களை சிபிஐயைக் காட்டி பயமுறுத்துகிறார்கள். மிட்டுகிறார்கள். தங்களுக்கு ஆதரவாக அவர்களைத் திரும்ப வைக்க சிபிஐயைப் பயன்படுத்துகிறார்கள்.
லதாவின் பாரதரத்னா தைரியம் இருந்தால் பறிக்கட்டும்
என்னைப் பாராட்டிப் பேசியதற்காக பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாரதரத்னா விருதைப் பறிக்க வேண்டும் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். என்ன தைரியம் அவர்களுக்கு. அவர்களுக்குத் தைரியம் இருந்தால் விருதைப் பறிக்கட்டும் பார்க்கலாம்.
மக்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற விரும்பவில்லை காங்.
அதிகாரம் என்பது விஷம் என்று கூறுகிறார் ராகுல் காந்தி. அதாவது மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக, சக்தி படைத்தவர்களாக, உரிமை படைத்தவர்களாக விளங்குவதில் விருப்பம் இல்லாதவர்கள் காங்கிரஸார். அதனால்தான் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதிலிருந்து அவர்கள் விலகியே இருக்கிறார்கள். அந்த அதிகாரத்தைத்தான் விஷம் என்று கூறுகிறார் போலும் ராகுல் காந்தி.
வரலாறு காணாத கூட்டம்
கர்நாடக வரலாற்றில் இன்று கூடிய கூட்டத்தைப் போல எந்த அரசியல் கட்சிக்கும் கூட்டம் கூடியதில்லை. அந்த வகையில் இன்றைய கூட்டம் வரலாறு படைத்து்ளது. நான் பெங்களூரில் காவி அலையைக் காண்கிறேன்.
மக்களுடன் தொடர்புடைய கட்சி பாஜக மட்டுமே, காங். அல்ல
உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டே அரசியல் செய்து வருகிறது காங்கிரஸ். ஆனால் பாஜக அப்படி அல்ல, வெளியில் போய் பணியாற்றுகிறது. மக்களுடன் தொடர்புடைய ஒரே கட்சி பாஜக மட்டுமே.
நாட்டின் இளைஞர் வளத்தை ஓட்டுகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது காங்கிரஸ். அவர்களின் வளத்திற்காகவும், நலனுக்காகவும் அது கவலைப்படுவதில்லை.
ஆனால் நாங்கள் இளைஞர்களை சக்தி வாய்ந்தவர்களாக மாற்ற முனைகிறோம். அதுதான் எங்களது கனவாகும்.
நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த பாஜக முயல்கிறது. அதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியையும் நமது நாடு சந்திக்கும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், திறன் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூ. 1000 கோடி. ஆனால் அதே வளர்ச்சிக்காக சிறிய மாநிலமான குஜராத் ஒதுக்கிய தொகை ரூ. 800 கோடி.