''நீதிமன்றம் மூலம் அடித்தட்டு மக்களுக்கும் விரைவாக நீதி கிடைக்கணும்''... பிரதமர் மோடி சொல்கிறார்!
ஆமதாபாத்: அரசியலமைப்பின் வாழும் சக்தியாக தனது கடமையை நீதித்துறை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
அடித்தளத்தில் உள்ள நபருக்கும், உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் உலகத்தரம் வாய்ந்த நீதி முறையை உருவாக்குவது, நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
நீதித்துறையை நவீனமயமாக்கும் பணிகளில் தற்சார்பு இந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நல்ல செயல்பாடு
குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியலமைப்பின் வாழும் சக்தியாக தனது கடமையை நீதித்துறை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நீதித் துறையையும், இந்திய ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதில் மிகப் பெரும் பங்காற்றி வரும் உயர் நீதிமன்றத்தின் கிளைகளையும், வழக்கறிஞர்கள் சங்கங்களையும் பாராட்டுகிறேன்.
நீதித்துறை பொறுப்பே இதுதான்
குடிமக்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் சிறப்பாக பங்காற்றி அது சட்டவிதிமுறையை நிறைவேற்றியுள்ளது. நாகரிகம் மற்றும் சமூகக் கட்டுமான அமைப்பின் அடித்தளமாக சட்டவிதிமுறைகள் விளங்குகிறது. சிறந்த நல்லாட்சியின் அடித்தளமாகவும் இது திகழ்கிறது. மூக கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள நபருக்கும், உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் உலகத்தரம் வாய்ந்த நீதி முறையை உருவாக்குவது, நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் பொறுப்பு.
அர்ப்பணிப்புடன் செயல்பட்டது
பெருந்தொற்று போன்ற நெருக்கடி மிக்க தருணங்களில் நீதித்துறையின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. வழக்குகளைக் காணொலி காட்சி வாயிலாக விசாரித்து, குறுஞ்செய்தி வாயிலாக தகவல்களைப் பரிமாறி, மின்னணு மூலம் வழக்குகளைப் பதிவு செய்து கொண்டது. யூடியூப் வாயிலாக தனது அறிவிக்கை பலகைகளை ஒளிபரப்பிய தோடு, நீதிமன்றத்தின் இணையதளத்தில் நீதிமன்ற உத்தரவுகளும், தீர்ப்புகளும் வெளியிடப்பட்டன.
தற்சார்பு இந்தியா முக்கியம்
நீதித்துறையை நவீனமயமாக்கும் பணிகளில் தற்சார்பு இந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா தனது சொந்த காணொலிக்காட்சி தளத்தை ஊக்குவிக்கின்றது. இன்று மக்கள் நீதி மன்றங்கள் உரிய நேரத்தில், ஏற்புடைய வகையில் நீதியை வழங்குவதால் 24 மாநிலங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் மின்னணு மக்கள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற வேகம், நம்பகத்தன்மை மற்றும் வசதிதான் இன்றைய நீதித்துறையின் தேவையாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.