பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வருவோருக்கு, வங்கிகளில் தனி கியூ! அரசு உத்தரவு
வங்கிகளில், பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்ய வருவோருக்கு தனி கியூவும், ரூபாயை எடுக்க வருவோருக்கு தனி கியூவும் அமைக்க வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.
டெல்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி கியூ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வினியோகம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து அறிந்ததும், வங்கிகளில் பண பரிமாற்றம் எப்படி நடைபெறுகிறது, ஏன் இந்த பிரச்சினை என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் உள்ளோர் இதில் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நிதி அமைச்சக துறையின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைதான்:
*வங்கி தாளாளர்கள் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரத்தை இருப்பு வைத்திருக்கலாம். வங்கி தாளாளர்கள் ஒரே நாளில் பலமுறை பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
*புதிய வகை ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை ஏற்கும் வகையில் ஏடிஎம்கள் மாற்றப்படுகின்றன. இந்த பணியை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது.
*நடமாடும் மைக்ரோ ஏடிஎம்கள் அதிக அளவில் நிறுவப்படும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ள வசதி செய்யப்படும்.
*பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மருத்துவமனை உட்பட சில இடங்களுக்கு வழங்கப்பட்ட விதிமுறை தளர்வு வரும் 24ம் தேதிவரை தொடரும்.
*வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு தனி கியூ ஏற்படுத்த வேண்டும்.
*வங்கிகளில், பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்ய வருவோருக்கு தனி கியூவும், ரூபாயை எடுக்க வருவோருக்கு தனி கியூவும் அமைக்க வேண்டும்.