மோடிக்கு ஆசி வழங்கிய தாயார்.. டிவியில் பார்த்து கண் கலங்கிய ஷெரீப்பின் தாயார்!
டெல்லி: நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கைகுலுக்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இரண்டு வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் இந்த சந்திப்பு, நல்லிணக்கத்தை வளர்க்க ஒரு விதையாக அமைந்துள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அதில் சார்க் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பங்கேற்றதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பின் முதலில் நவாஸ் ஷெரிப் அவருடன் கைகுலுக்கினார்.
விழாவின் போது நவாஸ் பத்திரிக்கையாளர்களிடம், "நான் இங்கே நிற்பதில் பெருமையடைகிறேன். நிறைய எதிர்பார்ப்புகளுடன் நான் இங்கு வந்துள்ளேன். இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
நவாசுடன் கைகுலுக்கிய பின் தனது டுவிட்டரில் மோடி, "இஸ்லாமாபாத்தில் தங்கியுள்ள நவாஸ் ஷெரிப் வாரம் ஒரு முறை தனது தாயை பார்க்க செல்வாராம். அவ்வாறு கடந்த வாரம் தனது தாயை அவர் பார்த்த போது, எனது தாய் எனக்கு இனிப்பு வழங்கி ஆசி தந்த காட்சியை தொலைக்காட்சியில் இருவரும் பார்த்துள்ளனர்.
அவர்கள் இருவரின் மனதையும் அக்காட்சி வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வை பார்த்து தனது தாயார் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாகவும் கண் கலங்கியதாகவும் நவாஸ்ஜி என்னிடம் தெரிவித்தார்" என டுவிட் செய்துள்ளார்.