அமைச்சர்களுக்கு இனி “நோ லீவ்” – பிரதமர் நரேந்திர மோடி ”ஆர்டர்”!
டெல்லி: மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக விடுப்பில் போகக் கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். அந்த கூட்டத்தில் மோடி, மந்திரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில், "மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுங்கள். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட நீங்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் லீவு போட்டு விட்டு, வெளி இடங்களுக்கு சுற்றுப் பயணம் செல்லக்கூடாது. அத்தகைய பொழுது போக்குப் பயணங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீங்கள் அனைவரும் திறம்பட செயலாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாட்களில் சுற்றுப் பயணம் செல்வதை தவிர்த்து விட்டு சபையில் இருக்க வேண்டும். கேள்வி நேரத்தில் உரிய பதில்கள் சொல்ல நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
எல்லா கேபினெட் அமைச்சர்களும் தங்கள் துறை அமைச்சர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பழக வேண்டும். அனைத்து கோப்புகளையும், இருவரும் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
நீங்கள் இணைந்து செயல்பட்டால்தான் அமைச்சர்களுக்கும் நமது அரசின் கொள்கைகள் முழுமையாக மனதில் பதியும். இதற்காக கேபினெட் அமைச்சர்கள் ஒவ்வொரு புதன் கிழமையும் அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதை வழக்கத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.