விவசாயி தற்கொலை... மோடி அரசு தான் காரணம்.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி : விவசாயிகளுக்கு எதிராகவே மோடி அரசு செயல்படுவதாக டெல்லி பேரணியில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரசைத் தொடர்ந்து, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஆத்மி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன கூட்டமும், பேரணியும் நடத்தப்பட்டது.
இந்தப் பேரணி நடந்த மைதானத்தில் ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘தனது நிலமும் பயிரும் அழிக்கப் படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக' தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதனால், ஆத்திரடைந்த விவசாயிகள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, பேரணியில் பேசிய கெஜ்ரிவால், ‘தற்கொலைக்கு முயன்ற விவசாயியை காப்பாற்ற டெல்லி போலீசார் முயற்சி செய்யவில்லை. டெல்லி போலீசார் எனது கட்டுப்பாட்டில் இல்லாததால் நான் கூறுவதை அவர்கள் கேட்பதில்லை. மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகி என்ன செய்தது? விவசாயிகளுக்கு எதிராகவே மோடி அரசு செயல்படுகிறது. பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதற்கே மோடி அரசு செயல்படுகிறது. விவசாயிகளின் நிலங்ளை எடுக்க நினைக்கிறார் மோடி.
பா.ஜ., அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவே இது போன்ற தற்கொலைகளுக்கு காரணம். இந்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் ஒன்று சேர வேண்டும். நாட்டில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு, இழப்பீடு கேட்க ஒரு மணிநேரம் போதும். இது பணக்காரர்களுக்கான அரசு. எந்த விவசாயியும் தங்கள் நிலத்தை விற்று விட்டு ரிக்சா இழுக்க விரும்ப மாட்டான். அவர்களின் பயிர்களுக்கும் குறைந்த விலையையே அரசு வழங்குகிறது' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications