லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியே வெல்லும்: மோடி பிரதமர் ஆவார்: கருத்துக்கணிப்பு
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிற கட்சிகளை விட அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்பது குறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி சிஎஸ்டிஎஸ் மற்றும் லோக்நிதி அமைப்புகளுடன் சேர்ந்து கருத்துக்கணிப்பை நடத்தியது.
என்.டி.ஏ.
இன்றே லோக்சபா தேர்தலை நடத்தினால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 212 முதல் 232 சீட்கள் கிடைக்கும். அதில் பாஜகவுக்கு மட்டும் 193 முதல் 213 வரை கிடைக்குமாம்.
பாஜக
வரும் தேர்தலில் பாஜவுக்கு தான் வாக்களிப்போம் என்று 33 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது பாஜகவுக்கு கிடைத்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
காங்கிரஸ்
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 26 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியை விட குறைந்த அளவே ஆதரவு கிடைத்துள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ்
தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக ஆதரவு உள்ளது. மமதா கட்சிக்கு 20 முதல் 28 சீட்கள் கிடைக்குமாம்.
மூன்றாவது அணி
மூன்றாவது அணி வரும் தேர்தலில் 15 முதல் 23 இடங்களையே கைப்பற்றுமாம். மூன்றாவது அணியில் பிரதமர் வேட்பாளராக பலர் போட்டி போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.