காவல்துறை ஸ்மார்ட்டாக மாற வேண்டும்: போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேச்சு
குவஹாத்தி: காவல்துறையை 'ஸ்மார்ட்' ஆக மாற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
அசாம் தலைநகர் குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில போலீஸ் டிஜிபிகள் மாநாட்டில் பங்கேற்று போலீசார் மத்தியில் அவர் கூறுகையில் "நானும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் மாநில முதல்வர்களாக இருந்து காவல்துறையை நிர்வகித்த அனுபவம் உள்ளவர்கள். எனவே நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு அறிவோம்.
நமது உளவுத்துறை மிகவும் திறமையானது. துப்பாக்கி, வெடிகுண்டு இன்றி நமது உளவு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு தகவல்களை அளித்து வருகிறது. நமது காவல்துறை ஸ்மார்ட் ஆக மாற வேண்டும். தகவல் தொழில்நுட்ப அறிவு, நவீன அறிவியல் போன்றவற்றை தெரிந்தவர்களாக நமது போலீசார் மாற்றப்பட வேண்டும். போலீஸ் ஸ்மார்டாக மாறினால் ஆயுதங்களுக்கு தேவையிருக்காது.
சுதந்திரத்திற்கு பிறகு பணியின்போது உயிரிழந்த 33 ஆயிரம் போலீசாரின் குடும்பங்களுக்கு மரியாதை அளிக்க விரும்புகிறேன். போலீஸ் அகாடமியில் உள்ள பாட புத்தகத்தில், பணியின்போது இறந்த போலீசாரின் விவரங்கள் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த பாட புத்தகம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
போலீசார் மிகவும் பணிச்சுமைகளுடன் கஷ்டப்பட்டுவருவதை அறிவேன். போலீசாரின் குடும்பத்தாருக்கும் அரசு போதிய வசதிகளை செய்து கொடுத்தால்தான் போலீசாரால் நிம்மதியாக வேலை பார்க்க முடியும். எனவே போலீசாரின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நலன் தரும் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். காவல்துறை பணி என்பது உயிர்ப்புடன் செய்யயப்பட வேண்டியது. இயந்திரத்தனமாக நடந்துவிடக்கூடாது. இவ்வாறு மோடி பேசினார்.