சோனியாகாந்தி வாயில் சர்க்கரை போட வேண்டும் என்ற மோடி
அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் டி.பி.நடிகை ஸ்மிருதி இரானி நிறுத்தப்பட்டுள்ளார். போட்டி பலமாக
இருப்பதால் ராகுலின் சகோதரி பிரியங்கா அமேதியில் முகாமிட்டு ராகுலுக்கு வாக்களிக்குமாறு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் மோடி இன்று அமோதி தொகுதிக்கு சென்று இரானிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது ராகுலுக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிராக விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசியதாவது:
பாஜக ஆட்சிக்கு வந்ததும் அமேதி தொகுதிக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவருவோம். அதற்கு முலாயம்சிங் உதவுவார் என்று நம்புகிறேன். இந்த தேர்தல் அரசியலை கணிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை தர உள்ளது. காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியடைய உள்ளது. ஸ்மிருதி யார் என்று தெரியாது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேரு குடும்பத்தாரின் அகம்பாவம் மிகவும் அதிகரித்துள்ளது. இப்போது கூறுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்மிருதி
இரானி, என்னுடைய சகோதரி. எனது சகோதரியை அமேதியில் இருந்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
நான் பழிவாங்குவதற்காக அரசியலுக்கு வரவில்லை. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். காங்கிரசில் குடும்ப அரசியல் நடந்துவருகிறது. முன்னாள் பிரதமர்
நரசிம்மராவ் இறந்தபிறகு அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்திற்குள் கூட விடவில்லை. நேரு குடும்பத்துக்கு மட்டுமே பிரதமராகும் மற்றும் ஆட்சியை அனுபவிக்கும்
உரிமையுள்ளதைப்போல நடந்துகொண்டுள்ளார்கள். பிரதமர் மன்மோகன்சிங்கையும், மத்திய அமைச்சரவையும் ராகுல்காந்தி அவமரியாதை செய்தார். அமைச்சரவை எடுத்த முடிவை முட்டாள்தனமானது என்றார். காங்கிரஸ் மூத்த
தலைவர் சீத்தாராம் கேசரி சோனியாவின் கோபத்தால் கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் ஊழல், விலைவாசி உயர்வு பற்றி ஏதாவது பேசியுள்ளனரா. நான் 2019ல் மீண்டும் அமேதி வருவேன். அப்போது இங்கு என்ன பணிகள் நடந்துள்ளன என்பதை உங்கள்
முன்பு கூறுவேன். நான் நான்கு முறை முதல்வராக பதவி வகிப்பவன். ஆனால் 95 வயதான எனது தாயார் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆட்டோவில்தான் வாக்குச்சாவடிக்கு வந்தார். குஜராத் மாடலை பற்றி பேசும் முன்பு அமேதியில் என்ன சாதனை செய்துள்ளீர்கள் என்று ராகுல் தெரிவிக்க முடியுமா? ‘ஏ தில் மாங்கே மோர்' (எனது மனம் நிறைய கேட்கிறது). தாமரை சின்னத்துக்கு நிறைய எம்.பி.க்களை தாருங்கள் என்று நான் மக்களிடம் கேட்டால், சோனியாவிக்கு பிடிப்பதில்லை.
கேட்டுப் பெறுவதை அவர்கள் அவமானமாக கருதுகின்றனர். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஏழை தாய்க்கு பிறந்தவன் பிச்சை எடுக்காமல் என்ன செய்வான்?
நமது வீரர்களின் தலைகளை பாகிஸ்தானியர்கள் துண்டிக்கும் போது மத்திய அரசு எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது. கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிகையைவிட
தற்கொலை செய்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகி, கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளது. 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' (ராணுவ வீரர்கள்
வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கம் எல்லாம் போய் 'மர் கிசான், மர் ஜவான்' (விவசாயி சாகட்டும், ராணுவ வீரர்கள் சாகட்டும்) என்பதே தற்போதைய முழக்கமாக இருக்கிறது.
நான் பிரதமராகி விட்ட நினைப்பில் பேசி வருவதாக சோனியா காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீங்களே(சோனியா) மோடி தன்னை
பிரதமராக கருதிக் கொள்கிறார் என்று கூறும்போது, உங்கள் வாக்கு பலிக்கட்டும். உங்கள் வாயில் நெய்யுடன் கலந்த சர்க்கரையை போட வேண்டும் என்றுதான் என்னால் கூற முடியும். இவ்வாறு அவர் பேசினார். மோடியின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.