கணவன் குடிச்சிட்டு வந்தால் உதைங்க.. விடாதீங்க.. இந்தாங்க 'பேட்'.. அமைச்சரின் அசத்தல் கல்யாண பரிசு
கணவன் குடித்துவிட்டு வந்தால் அவரை அடித்துத் தாக்க மணமகளுக்கு சிறிய அளவிலான ‘பேட்’டை கல்யாண பரிசாகக மத்திய பிரதேச அமைச்சர் கொடுத்து அசத்தியுள்ளார்.
போபால்: மத்தியப் பிரதேசத்தில் அரசின் சார்பில் 700 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் பங்கேற்ற அம்மாநில அமைச்சர் கோபால் பார்கவா அனைத்து ஜோடிகளுக்கும் மரத்தில் செய்யப்பட்ட சிறிய அளவிலான 'பேட்' ஒன்றை கல்யாணப் பரிசாக வழங்கினார்.
அந்த பேட்டில் "குடிப்பவர்களை அடித்தால், போலீஸ் தலையிடக்கூடாது" என்று எழுதி அமைச்சர் பார்கவா பெண்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார்.
குடித்தால் உதை
பரிசளித்த பின்னர், திருமண நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோபால் பார்கவா, குடித்துவிட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது இந்த கட்டைதான் பேச வேண்டும் என்று கூறினார். ஆண்கள் குடிப்பதால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
10 ஆயிரம் பேட்
மேலும், 10 ஆயிரம் ‘பேட்'கள் தயார் செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் புதிதாக திருமணம் ஆகும் ஜோடிகளுக்கு வழங்க உள்ளதாகவும் பார்கவா தெரிவித்தார். இனி, மத்திய பிரதேசத்தில் உள்ள எல்லா கணவர்மார்களும் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.
புலம்பல்
கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எப்போது சென்றாலும், அங்குள்ள பெண்கள் தங்கள் கணவர்மார்கள் குடிப்பது பற்றி புகார் சொல்லி குமுறுவார்கள். கொஞ்சம் பணம் சம்பாதித்தாலும் அதனை சாராயம் வாங்கி குடித்து வந்து விடுகின்றனர் என்று பெண்கள் புலம்புகிறார்கள் என்று அமைச்சர் பார்கவா தெரிவித்துள்ளார்.
வன்முறை
குடித்துவிட்டு வரும் கணவர்மார்களால் பெண்கள் மிக மோசமாக தாக்கப்படுவதை பார்கவா சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சனையை அரசோ அல்லது காவல்துறையோ தீர்த்துவிடும் என்று நம்ப முடியாது என்று தெரிவித்த அவர், குடிப்பழக்கத்தை ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பேச்சுவார்த்தை
அதே போன்று குடிப்பழக்கம் உள்ள கணவர்மார்களிடம் அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று பெண்கள் பேச வேண்டும் என்று பார்கவா அறிவுறுத்தினார். இந்த ‘பேட்' பரிசு தொடர்ந்து நிகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.