மதவாத சக்திகளுடன் கை கோர்த்துள்ள முலாயமுடன் எப்படி சேருவது?.. மாயாவதி நிராகரிப்பு
டெல்லி: உ.பியில் மதக் கலவரங்களை நிகழ்த்திய மதவாத சக்திகளுடன் கை கோர்த்துள்ளது சமாஜ்வாடிக் கட்சி. இந்த நிலையில் அந்தக் கட்சியுடன் எப்படிக் கூட்டணி அமைப்பது என்று கேட்டுள்ளார் உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி.
மேலும் உ.பி. இடைத் தேர்தலை தனித்தே சந்திப்போம் என்றும் அறிவித்துள்ளார். இதனால் முலாயம் - மாயாவதி இணைவார்களா என்ற கேள்வி ஆரம்ப கட்டத்திலேயே தடங்கலைச் சந்தித்துள்ளது.
நானும், நிதீஷ் குமாரும் இணைந்தது போல முலாயமும், மாயாவதியும் இணைய வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த முலாயம் சிங் யாதவ், லாலு அதைச் செய்தால் நான் கூட்டணிக்குத் தயார் என்று கூறியிருந்தார்.
ஆனால் லாலு விருப்பத்தை மாயாவதி நிராகரித்துள்ளார். டெல்லியில் இதுகுறித்து அவர் கூறுகையில், உ.பியில் மதக் கலவரங்களை நிகழ்த்திய மதவாத சக்திகளுடன் சமாஜ்வாடி கட்சி கை கோர்த்துள்ளது. நெருக்கமாக உள்ளது. அப்படிப்பட்ட கட்சியுடன் எப்படி கூட்டு சேர முடியும்.
உ.பியில் இடைத் தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே சந்திக்கும், வெல்லும் என்றார் மாயாவதி.
இதற்கிடையே, உ.பி. பாஜக தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் கூறுகையில், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் சகோதரக் கட்சிகள் போலத்தான். உ.பி. சட்டசபையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, செய்யும் அட்டகாசத்தைப் பார்க்கும்போது சமாஜ்வாடியின் பி டீம் போலத்தான் தெரிகிறது என்று கிண்டலடித்துள்ளார்.