உச்சத்தில் உ.பி. "அக்னி நட்சத்திரம்".. முதலில் 2வது மனைவி.. இப்போது 2வது மருமகள்.. தவிக்கும் முலாயம்
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தனது 2வது மருமகளுக்கு சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுத்ததுப் பிடிக்காமல்தான் அகிலேஷ் யாதவ் தரப்பு புரட்சியில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் குழப்பம் குண்டக்கமண்டக்க அதிகரிக்க முலாயம் சிங் யாதவின் 2வது மருமகள் அபர்ணா யாதவ்தான் காரணம் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் தரப்பு குமுறுகிறதாம்.
இவருக்கு முலாயம் சிங் யாதவ் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தனது 2வது மனைவி குடும்பத்தை வளர்த்து விட முயல்கிறார். இதன் மூலம் முதல் மனைவிக்குப் பிறந்த அகிலேஷ் யாதவ் குடும்பத்தை ஓரம் கட்டுகிறார் முலாயம் சிங் என்று அகிலேஷின் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
முலாயம் சிங் யாதவுக்கு இரு மனைவிகள். இதில் முதல் மனைவி மாலதி தேவிக்குப் பிறந்தவர்தான் அகிலேஷ் யாதவ். மாலதி தேவி 2003ம் ஆண்டு இறந்து விட்டார். அகிலேஷ் முதல்வராக உள்ளார். இவரது மனைவி டிம்பிள் யாதவ் கண்ணாஜ் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக உள்ளார்.
2வது மனைவி சாதனா குப்தா
முலாயம் சிங் யாதவின் 2வது மனைவி பெயயர் சாதனா குப்தா. இவர் இருப்பதே 2007ம் ஆண்டுதான் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. அவருக்கு பிரதீக் யாதவ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அகிலேஷுக்குத் தம்பி ஆவார். இவரது மனைவி பெயர்தான் அபர்ணா யாதவ்.
2வது குடும்பத்தால் குழப்பம்
முலாயம் சிங் யாதவின் 2வது குடும்பத்திற்கும், அகிலேஷ் தரப்புக்கும் இடையே ஒட்டவே இல்லை. ஒத்துப் போகவும் இல்லை. இதில்தான் குழப்பம் ஆரம்பித்தது. மேலும் முலாயமின் தம்பியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான ஷிவ்பால் யாதவுக்கும் இடையே முட்ட ஆரம்பித்ததால் பிரச்சினை பல மடங்காக அதிகரித்தது.
2வது மருமகளுக்கு லக்னோ சீட்
தனது மூத்த மருமகளுக்கு கண்ணாஜ் தொகுதியை கொடுத்த முலாயம் சிங் யாதவ், 2வது மருமகள் அபர்ணாவுக்கு சட்டசபைத் தேர்தலில் லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியை கொடுத்துள்ளார். இதுதான் அகிலேஷ் தரப்பை கோபப்படுத்தி விட்டது.
ஒரு வருடமாக பிரசாரம்
உண்மையில் கடந்த ஆண்டே இந்த சீட்டை அபர்ணாவுக்குக் கொடுத்து விட்டாராம் முலாயம் சிங். அவரும் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அகிலேஷ் தரப்பு. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் இதை ஏற்க முடியாமல்தான் பொங்கி எழுந்துள்ளாராம் அகிலேஷ்.
முலாயம் குடும்பத்தின் 20வது அரசியல்வாதி
முலாயம் சிங் யாதவின் குடும்பத்தில் ஏகப்பட்ட பேர் அரசியலில் உள்ளனர். அதில் 20வது நபராக சேர்ந்திருப்பவர்தான் அபர்ணா. ஆனால் இதை ஏற்க முடியாமல் உள்ளார் அகிலேஷ் யாதவ்.
மோடி ஆதரவாளர்
உண்மையில் முலாயமின் 2வது மகனும், மருமகளும் மோடியின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர். பசு வதைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மோடியுடன் செல்பியும் எடுத்து பரபரப்பைக் கிளப்பியவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
"அக்னி நட்சத்திரம்"!
உ.பியில் தற்போது உண்மையில் நடந்து வருவது "அக்னி நட்சத்திரம்" சண்டைதான். இதன் வெளிப்பாடே அகிலேஷ் யாதவ் தனது தந்தையுடன் விடாமல் மோதிக் கொண்டிருக்கிறார். தனது ஆதிக்கத்தை பகிர்ந்தளிக்க அவர் தயாராக இல்லை என்பதே உண்மையாகும்.