ஹெட்லியின் மாஜி மனைவியை விசாரிக்க மொராக்கோ செல்கிறது தேசிய புலனாய்வு ஏஜென்சி
டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்கக் குற்றவாளி டேவிட் ஹெட்லியின் முன்னாள் மனைவி பைசா குவாதல்ஹாவிடம் வாக்குமூலம் பெற தேசிய புலனாய்வு ஏஜென்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சட்டப்பூர்வமான வழிகள் குறித்து அது ஆராய்ந்து வருகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஹெட்லியும் சம்பந்தப்பட்டுள்ளார். தாக்குதலை திட்டமிட்ட தீவிரவாத அமைப்புக்காக ஹெட்லி உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டார். மும்பைக்கு நேரில் வந்து இதில் அவர் ஈடுபட்டார். அவர் மும்பையில் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது அவருடன் அவரது முன்னாள் மனைவ பைசாவும் உடன் இருந்துள்ளார்.
தற்போது ஹெட்லியை விட்டுப் பிரிந்து போய் விட்டார் பைசா. அவர் தற்போது மொராக்கோ நாட்டில் இருக்கிறார். அவரிடம் வாக்குமூலம் பெற தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி திட்டமிட்டுள்ளது.
மொராக்கோ மனைவி
இதுதொடர்பாக விரைவில் ஒரு குழு மொராக்கோ செல்லவுள்ளது. அவரைச் சந்தித்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளது. இதுதொடர்பான சட்டப்பூர்வமான வழிகளையும் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி ஆராய்ந்து வருகிறதாம்.
நிபந்தனை
இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், மொராக்கோ நாட்டு அரசுக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சி கடிதம் எழுதி அனுமதி கோரியது. மத்திய அரசு சம்மதித்து விட்டது. அதேபோல மொராக்கோ அரசுக்கும் ஆட்சேபனை இல்லையாம். இருப்பினும் மொராக்கோ அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
சம்மதிக்கும்
பைசாவிடம் பெறும் வாக்குமூலத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது என்பது நிபந்தனைகளில் ஒன்றாகும். அதற்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி சம்மதிக்கும் என்றே தெரிகிறது.
ஹெட்லிக்கு எதிரான ஆதாரம்
தேசிய புலனாய்வு ஏஜென்சியைப் பொறுத்தவரை, ஹெட்லிக்கு எதிரான ஆதாரத்தை வலுப்படுத்திக் கொள்ளவே பைசாவிடம் வாக்குமூலம் பெற ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இரு மேஜர்கள் குறித்த விளக்கம்
ஹெட்லியை பாகிஸ்தானிலிருந்து மேஜர் சமீர் அலி மற்றும் மேஜர் இக்பால் ஆகியோர் வழி நடத்தியதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாகவும் பைசாவிடம் கேட்கப்படும் என்று தெரிகிறது.
தெளிவுபடுத்திக் கொள்ள
மேலும் இந்த இரண்டு பேரையும் அடையாளம் காண்பதிலும் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு குழப்பம் உள்ளது. எனவே அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் பைசாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தகவல் இல்லை
இருப்பினும் பைசா தரப்பில் இதுதொடர்பாக எந்தத் தகவலும் இல்லை. அவர் விசாரணைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாரா என்பதும் தெரியவில்லை. இருப்பினும் தேசிய புலனாய்வு ஏஜென்சி சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.