உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை... மும்பையில் 16 இடங்களில் செல்பி எடுக்கத் தடை!
மும்பை: மும்பையில் செல்பி எடுக்க ஆபத்தானவைகளாகக் கருதப்படும் 16 இடங்களில் செல்பி எடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
செல்பி மோகத்தால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு சிலர் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதால் இந்த விபத்துக்கள் நடைபெறுகின்றன.
கடந்தமாதம் மும்பை பாண்டு ஸ்டாண்டு கடற்கரையில் செல்பி எடுக்கும் போது 2 கல்லூரி மாணவிகள் தவறி கடலில் விழுந்தனர். அந்த வழியாக சென்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்து மாணவி அன்சும் கானை மீட்டு கொண்டு வந்தார். பின்னர் ரமேஷும், மாணவி தருனும் அன்சாரியை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துக்கணிப்பு...
இது ஒரு உதாரணம் மட்டுமே, இன்னும் அங்கு ஏகப்பட்ட செல்பி மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மும்பை போலீசார் மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினர்.
16 இடங்கள்...
அதன்படி, மும்பையில் செல்பி எடுக்க ஆபத்தான இடங்களாக 16 இடங்கள் கண்டறியப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, மும்பையில் பாந்திரா பாண்டு ஸ்டாண்டு கடற்கரை உள்பட 16 இடங்களில் செல்பி எடுப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
அபராதம்...
இந்தத் தடையை மீறி ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.1,200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு பிரச்சாரம்...
மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். செல்பி மோகத்தால் உயிரிழப்புகளைத் தடுக்கவே இந்த முயற்சிகள் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.