ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் பெண்கள் தனியாக செல்லலாம்... முத்தலாக்கிற்கு பிறகு மோடி அதிரடி
ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் பெண்கள் ஆண் துணையில்லாமல் தனியாக செல்லலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி : ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் பெண்கள் ஆண் துணையில்லாமல் தனியாக செல்லலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால் முஸ்லிம் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், முஸ்லிம் பெண்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்ல வேண்டுமானால் ஆண் துணையுடன்தான் செல்ல வேண்டும் என்ற விதியை பார்த்து வியந்தேன்.
இது யார் வகுத்த விதி. ஏன் இந்த பாரபட்சம் என்று நான் இந்த விவகாரத்தில் ஆராய்ந்தபோதுதான் தெரிந்தது, இந்த விதிகள் கடந்த 70 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்கள் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதுகுறித்து எந்த வித விவாதமும் தேவையில்லை.
இஸ்லாமிய நாடுகளில் கூட இந்த முறை கடைபிடிக்கப்படுவதில்லை. நம் இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு இந்த உரிமை கூட கிடையாது. இதனால் நாம் சிறுபான்மை துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு இந்த விதிமுறையை நீக்க கூறினேன்.
மேலும் அனைத்து முஸ்லிம் பெண்களும் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யவும் அமைச்சகத்திடம் கூறியுள்ளேன். பொதுவாக ஹஜ் பயணத்துக்கு மானியத்தில் செல்ல குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆனால் இனிமேல் ஆண்கள் இல்லாமல் தனித்து வரும் பெண் பயணிகளுக்கு அந்த குலுக்கல் நடைமுறையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் சிறப்பு பிரிவில் அவர்கள் ஹஜ் பயணம் செல்ல வாய்ப்பாக அமையும் என்றார் பிரதமர் மோடி.