யதுவீர் கோபால் ராஜ் அர்ஸ்.. மைசூரு மன்னர் குடும்பத்தின் அடுத்த வாரிசு!
மைசூரு: மைசூரு மன்னர் குடும்பத்தில் உடையார் வம்சத்து வாரிசாக யதுவீர் கோபால் ராஜ் அர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைசூரு மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு, ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமாகி, ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அடுத்த வாரிசை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.
ஸ்ரீகண்டதத்த உடையாருக்கு வாரிசு யாரும் இல்லாததால் அரச குடும்ப குழுவாக கருதப்படும் பரதந்திர பரக்கலா மடாதிபதியின் முடிவை ஏற்க, ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மனைவி பிரமோதா தேவி சம்மதித்தார். அதன்படி, மன்னர் குடும்பத்தில் அனைத்து நபர்களின் ஜாதகங்களையும் பரிசீலனை செய்த அவர், அவர்கள் குடும்பத்தில், இளைஞராக உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்தார்.
ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்கு பின், 25வது மன்னரான ஜெயசாம்ராஜேந்திரா உடையாரின் மூத்த மகளான காயத்ரி தேவியின் மகன் காந்தராஜ் அர்ஸ், வாரிசாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், காந்தராஜ் அர்ஸின் மூத்த சகோதரி திரிபுரசுந்தரி தேவியின் மகன் யதுவீர் கோபால் ராஜ் அர்ஸ் (22,) பெயரை, அரண்மனை குரு தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
வாரிசுப் போட்டியில் கடுமையான போட்டி நிலவியது. சட்டப்போராட்டமும் ஏற்பட்டது. இந்த நிலையில் யதுவீர் கோபால் ராஜ் அர்ஸ்தான் வாரிசு என்றும் தசாரா பண்டிகை காலங்களில் அனைத்து சம்பிரதாயங்களிலும் யதுவீர் பங்கேற்பர் என்று மாநில அரசுக்கு அரண்மனையில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
யதுவீர் கோபால் ராஜ் அர்ஸ்தான் மைசூர் மன்னர் குடும்பத்தின் அடுத்த வாரிசு என்று ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மனைவி பிரமோதா தேவி உடையார், அரண்மனை மாளிகையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
200 ஆண்டுகால பழமையான உடையார் வம்சத்தின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டுள்ள யதுவீர் தொழிலதிபர் ஸ்வரூபானந்த அர்ஸ் - திரிபுரசுந்தரி தேவியின் மகனும், ஜெயசாம்ராஜேந்திர உடையாரின் கொள்ளு பேரனுமாவார். யதுவீர் பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர்கள் குடும்பம் பெங்களூருவில் தான் வசித்து வருகிறது.
மன்னர் குடும்பத்து வாரிசாக தத்தெடுக்கும் வைபவம் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் யதுவீர், கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என்று அழைக்கப்படுவார்.