சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு.... மீண்டும் அருணாச்சல் முதல்வராக பதவியேற்றார் காங்கிரசின் நபம் துகி
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. அம்மாநில முதல்வராக நபம் துகி நேற்று இரவு மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது செல்லாது என்றும், காங்கிரஸ் அரசை மீண்டும் அமைக்குமாறும் உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து ஏற்கனவே காங்கிரஸ் அரசில் முதல்வராக இருந்த நபம் துகி நேற்று இரவு, மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார். டெல்லியில் உள்ள அருணாசலபிரதேச பவனில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் மாநில தலைமைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருடன் அடுத்தகட்ட பணிகள் குறித்து அவர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நபம் துகி, அருணாசலபிரதேசத்துக்கு சென்றவுடன் அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும் கூட்டுவேன் என்றார்.