விவசாயிகள் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் போராட்டம்? டெல்லியில் விஷால் பேட்டி
டெல்லி: டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய நதிநீர் இணைப்பு சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதலான போராட்டத்திற்கு இதன் தமிழக தலைவர் அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார்.
இந்தத் தொடர் போராட்டத்தில் சுமார் 100 விவசாயிகள் கலந்துகொண்டனர். காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
போராட்டத்தின் எதிரொலியால், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் தமிழக விவசாயிகள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்துப் பேசினர்.

அமைச்சர்கள் சந்திப்பு
மத்திய நீர்பாசனத்துறையின் உமாபாரதி ஆகிய இரு அமைச்சர்களுடன் விவசாயிகள் சந்திப்பு நடைபெற்றது. இதற்கு, அதிமுக எம்பிக்கள் ஏற்பாடு செய்திருந்ததனர். இதேபோல், மத்திய கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து துறையில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்குடன் விவசாயிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

போராட்டம்
ஆனால், இன்னும் உறுதியான ஒரு தீர்வு கிடைக்கவில்லை. எனவே விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. பெண்கள், ஆண்கள் என முதிய விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். தெருவிலேயே கோவணம் கட்டியபடி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விஷால், பிரகாஷ் ராஜ்
நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இன்று, டெலல்லியில் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதன்பிறகு விஷால் நிருபர்களிடம் கூறியது: 11 நாட்களாக இவர்கள் திண்டாடிக்கொண்டுள்ளனர். இவர்கள் கேட்பது முக்கியமான ஒரு விஷயம். விவசாயிகள் கடனால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விவசாயிகள் போராட்டம் நடத்தும் வீடியோவை முந்தாநாள் பார்த்துவிட்டு டெல்லிக்கு வந்தோம்.

கடன் தொகை அதிகம்
பத்து பேரின் கடனை தீர்க்க முடியும் என்றால் நாங்களே கடனை தீர்த்திருப்போம். ஆனால் பல கோடிக்கணக்கான கடன் தொகை உள்ளது. எனவே அரசு தலையிட்டு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதமரிடம் ஏற்கனவே இதுபற்றி கோரிக்கைவிடுத்துள்ளனர். அரசு பிரதிநிதிகள் யாராவது நேரில் வந்து இவர்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும்.

முதியவர்கள்
போராடுவோர் எல்லோரும் வயதில் மூத்தவர்கள். அவர்களால் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாது. ஹரியானாவிலிருந்து கூட விவசாயிகள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லிக்கு வந்துள்ளனர் என்றார். நடிகர் சங்கம் இதற்கு போராட்டம் நடத்துமா என நிருபர்கள் கேட்டபோது, போராட்டம் நடத்துவதைவிட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். வங்கிகளின் கடன் கெடுபிடிகளால்தான் விவசாயிகள் டெல்லியில் வந்து உட்கார்ந்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications